விஜய பிரபாகரனுக்கு இன்னும் பதவி கொடுக்காதது ஏன்?.. தேமுதிகவில் முனுமுனுப்பு
Recommended Video
சென்னை : சிங்கமாக சீறிய கேப்டன் விஜயகாந்த், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட தேமுதிகவின் தலைமைப் பொறுப்பில் அவரது மகன் விஜய பிரபாகரனை நியமிக்க தாமதம் ஏன் என்ற முனுமுனுப்பு கட்சியில் எழுந்துள்ளதாம்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் உடல் நலம் நலிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அதன் எதிரொலியாக, அந்தக் கட்சியும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
தேமுதிகவை அடுத்து தலைமையேற்று நடத்தப்போவது யார்? என்கிற கேள்வியும் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. விஜயகாந்த்திற்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் தேமுதிகவில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன்படி, விஜயகாந்த் தமது மகன் விஜய பிரபாகரன் கட்சியை வழிநடத்தும்படி கேட்டுக் கொண்டார்.
பொறுப்புகள் அறிவிப்பு
சுதிஷ் வகித்து வந்த இளைஞரணி துணைப்பொதுச்செயலாளர், இளைஞரணி செயலாளராக ஆகிய இரு பதவிகளில் இளைஞரணி செயலாளர் பொறுப்பு விஜய பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்தார். விஜயபிரபாகரன் விரைவில் அந்தப்பொறுப்பை ஏற்பார் என கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில், கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத பிரேமலதா தேமுதிக பொறுப்பாளரானார்.
தேமுதிகவினர் அதிர்ச்சி
ஆனால் விஜயபிரபாகரனுக்கு இன்னும் பொறுப்பு வழங்கப்படவில்லை. இதற்கு என்ன முட்டுக்கட்டை என்று கட்சியினருக்குத் தெரியவில்லை. ஆனால் உள்ளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இணையத்தில் டாப்
காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தனது அரசியல் பயணத்தை விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் துவங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய மேடையில் விஜயபிரபாகரன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலானது. அவரது பேச்சு பாராட்டப்பட்டதால் கட்சியினர் உற்சாகமாக அதன் பிறகு வேறு எந்த நிகழ்ச்சியிலும் விஜயபிரபாகரன் பங்கேற்கவில்லை. அதற்கு பிரேமலதாவின் குறுக்கீடே காரணம் என்கின்றனர் தேமுதிகவினர்.
கட்சியினர் புலம்பல்
கட்சி விவராகரங்கள் அனைத்தையும் விஜயபிரபாகரன் கவனித்துக் கொள்வார் என்ற விஜயகாந்தின் நிலைப்பாட்டை பிரேமலதா விரும்பவில்லை என்கிறார்கள். அனைத்தும் தனது முடிவுப்படிதான் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று கட்சிக்குள் முனுமுனுக்கிறார்கள். இதனால் இந்தப் பிரச்சினை எப்போது சரியாகும், விஜய பிரபாகரனுக்கு எப்போது பதவி கிடைக்கும். தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் கட்சியினர் மூழ்கியுள்ளனர்.
தவிக்கும் தொண்டர்கள்
தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டதால் என்னசெய்வது, தேர்தல் செலவுக்கு பணம், தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள், பயணங்கள் ஆகியவற்றுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தேமுதிகவினர் தலையை பிய்த்துக் கொள்கின்றனர். இதற்கு எல்லாம் முடிவு கட்ட... அவர் வரணும்... பழைய பன்னீர் செல்வமா... வரணும் என்று ஒற்றை பிரார்த்தனையில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். முரசு 2019ல் ஒலிக்குமா என்பது என்பது கேப்டனின் பேக் டு தி பெவிலியன் தான் முடிவு செய்யும்.