வக்பு சட்டம்.. தீவிரமடையும் எதிர்ப்பலை.. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சென்னை உட்பட பல நகரங்களில் இன்று வக்பு சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃப் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
வக்பு திருத்த மசோதா எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற வக்பு சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு, போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்பு சட்டத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடியில் விசிக சார்பில் இன்று வக்பு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வக்ஃப் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து எம்எல்ஏ அமனத்துல்லா கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் என வக்ஃப் மசோதாவுக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications