ஊட்டியாக மாறிய சென்னை.. சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கொட்டிய கோடை மழை.. நெகிழ்ந்த மக்கள்
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய நிலையில், இன்று திடீரென பலத்த காற்று வீச தொடங்கியுள்ளது. இதனால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னரே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியிருந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக வெப்பநிலை அதிகரித்தது. திருவள்ளூர் தொடங்கி சேலம், ஈரோடு வரையிலான மேற்கு மாவட்டங்களும், சென்னை முதல் பாண்டிச்சேரி, ராமநாதபுரம் வரையிலும் வெயில் வெளுத்துக்கட்டியது.

இருப்பினும், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை மக்களை குளிர்வித்து வந்தது. இந்நிலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக கடுமையான வெப்பத்தால் சென்னைவாசிகள் செய்வதறியாது திகைத்து வந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளிலேயே இரவு நேரத்தில் உறங்கி வந்துள்ளனர். இப்படி இருக்கையில் வெப்பமும், சூடான அனல் காற்றும் மக்களை அல்லல்படுத்திவிட்டது.
இந்நிலையில் இன்று மாலை சென்னையில் வானிலை வெகுவாக மாறியுள்ளது. பலத்த காற்று வீசியதால் வெயிலில் காய்ந்த கிளைகள் உடைந்து விழுந்தன. பைக் ஓட்டுபவர்களால் சாலையில் சரியாக செல்ல முடியவில்லை. காற்றில் தூசியும், பிலாஸ்டிக் கவர்களும் வாகன ஓட்டிகள் மீது படிந்துள்ளதால் பைக்குகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காலையிலிருந்து பதிவான வெயில் தற்போது முற்றிலுமாக குறைந்திருக்கிறது.
மேலும் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications