நாம் தமிழர் கட்சியுடன் அதிமுக கூட்டணி? நெருக்கும் நிர்வாகிகள்! சங்கடத்தில் எடப்பாடி பழனிசாமி
சென்னை: வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் கூட்டணி குறித்து பிறகு முடிவு எடுக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
மக்களவைத் தேர்தலில் தோல்வி தொடர்பாக 3ஆவது நாளாக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து அந்த தொகுதி நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சித் தலைமை யாருடன் கூட்டணி வைக்கலாம் என கேட்டதாக தெரிகிறது.
அதற்கு அவர்கள் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என பல நிர்வாகிகள் தெரிவித்தனராம். அது போல் பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என நிர்வாகிகள் தெரிவித்தனராம். 1999 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இதே போன்று தேர்தல் தோல்விக்கு பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். அது போல் சில நிர்வாகிகள் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றவர்களின் ஆதரவாளர்களை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என தொண்டர்களுக்கு கட்சித் தலைமை தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
அதே நேரத்தில் தஞ்சை அதிமுக நிர்வாகிகள், சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரலாம் என யோசனை தெரிவித்தனராம். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூவருக்கும் அதிமுகவில் மீண்டும் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தாராம்.
அதே சமயம் அதிமுக - நாம் தமிழர் கட்சிக்கு இடையே இருக்கும் நட்புறவு என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கூட நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதற்கான நன்றியையும் எடப்பாடி பழனிசாமி மேடையில் தெரிவித்தார்.
சாட்டை துரைமுருகன் கைதானதற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை பதிவு செய்தார். எனவே நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணிதான் சிறந்தது என்றனராம். கூட்டணி குறித்தெல்லாம் பேசுவதற்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் இருக்கிறதால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். அதுகுறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என்றாராம்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் , திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் கட்சியை தொடங்கினார் என்பதால் அவர் எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவு தருமாறு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கையை அதிமுக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. எனவே அதிமுகவுடன் நாம் தமிழர் கூட்டணி என்பது சாத்தியமில்லாததாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications