2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? வந்து விழுந்த கேள்வி.. சட்டென யோசிக்காமல் அமித் ஷா சொன்ன பதில்
சென்னை: தமிழகத்தில் அதிமுக பாஜக இடையே மீண்டும் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இதற்கிடையே தேர்தலில் அதிமுக பாஜக வெல்லும்பட்சத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமித் ஷா தந்த பதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக சொல்லி வந்த நிலையில், திடீரென அவர்கள் தங்கள் அரசியல் டோனை சில வாரங்களாக மாற்றினர். திமுகவை வீழ்த்த தேவையான கூட்டணியை அமைக்கவுள்ளதாக கூறினர்.

எடப்பாடி டெல்லி பயணம்
இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் திடீரென எடப்பாடி பழனிசாமி டெல்லியில் வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். முதலில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் மட்டும் தனியாக சுமார் 15 நிமிடங்கள் பேசினார். ஆனால், அது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இல்லை என்றே எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார்.
இருப்பினும், அதிமுக பாஜக இடையே விரைவில் கூட்டணி அமையவுள்ளதாகவே தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். இந்த பயணத்தில் அதிமுக உடனான கூட்டணி குறித்து அவர் இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்திப்பு நடைபெறுமா என்பதில் கேள்வியே நிலவி வந்தது.
கூட்டணி உறுதி
இதற்கிடையே திடீரென எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்திற்கு முன்பு அமித் ஷாவை சந்தித்தார். பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுக பாஜக கூட்டணியை அமித் ஷா உறுதி செய்தார். இதற்கிடையே கூட்டணி ஆட்சி அமையுமா என அப்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமித் ஷா முதலில், "நாங்கள் இணைந்து தான் ஆட்சியை அமைக்க போகிறோம். கூட்டணி ஆட்சி தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் நிச்சயம் கூட்டணி ஆட்சி நடைபெறும்" என பதிலளித்தார்.
கூட்டணி ஆட்சி
சட்டசபை தேர்தலில் வெல்லும் பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சராவார்களா என்ற மீண்டும் கேள்வி எழுப்பப்பட்ட போது அமித் ஷா, "வெற்றி பெற்ற பிறகு அதற்கான பதிலை சொல்கிறோம். திமுக ஏற்படுத்த முயலும் இதுபோன்ற குழப்பங்களுக்கு ஆளாக மாட்டோம். எடப்பாடி தலைமையில் கூட்டணி அமைகிறது. வெற்றிக்கு பிறகு மற்றவை குறித்து முடிவு செய்வோம். யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.. அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள என்பது குறித்து பின்னர் தான் பேச போகிறோம்" என்றார்.
ஏன் முக்கியம்
இந்தியாவில் பிற மாநிலங்களில் கூட்டணி அரசு அமைவது சாதாரணம் தான் என்ற போதிலும் தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததே இல்லை. கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் கூட திமுக 99 இடங்களில் மட்டுமே வென்ற போதிலும், கூட்டணி ஆட்சி அமையவில்லை. அப்போது காங்கிரஸ் வெளியில் இருந்தே திமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தது.
அதேநேரம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எடப்பாடி டெல்லி சென்றிருந்த போதும் அமித் ஷா, 2026இல் என்டிஏ கூட்டணி ஆட்சியே அமையும் என ட்வீட் செய்திருந்தார். இதன் காரணமாகவே செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். அப்போதும் அமித் ஷா பட்டும் படாமலேயே அதற்கு பதிலளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications