வேலை நிறுத்த போராட்டம்.. பொங்கலுக்கு பாதிப்பு இன்றி பஸ்கள் இயக்கப்படுமா? அமைச்சர் கொடுத்த விளக்கம்
சென்னை: மக்கள் பாதிக்கப்படாத வகையில், எல்லா பகுதியிலும் பேருந்து போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல் பொங்கல் வரை தொடர்ந்து அவர்களது வேலைநிறுத்தம் நீடித்தாலும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் பஸ்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இந்த விவகாரத்தில் சுமூக உடன்பாடு ஏற்பட இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எனினும், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இன்று காலை முதல் பல இடங்களில் வழக்கமான எண்ணிக்கையில் பல இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. குறிப்பாக நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதிக்காத வகையில்: அதேநேரம் சென்னையில் பல இடங்களில் பேருந்துகள் வழக்கம் போலவே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. சில பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் ஒரு சில பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் வழக்கம் போலவே இயங்குகிறது.
இதற்கிடையே இன்று அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாக எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பொங்கல் வரை தொடர்ந்து அவர்களது வேலைநிறுத்தம் நீடித்தாலும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் பஸ்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். விழுப்புரத்தில் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
சிறப்பு பஸ்கள்: மக்கள் பாதிக்கப்படாத வகையில், எல்லா பகுதியிலும் பேருந்து போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல் பொங்கல் வரை தொடர்ந்து அவர்களது வேலைநிறுத்தம் நீடித்தாலும் போக்குவரத்து மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். அவர்களும் அதற்கான பணிகளை செய்கிறார்கள்.
இதேபோல் போக்குவரத்து துறையில் இருக்கிற ஊழியர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றோரும் எல்லா இடங்களிலும் பணிக்கு வந்து பணியை செய்து வருகிறார்கள். மக்களுக்கான போக்குவரத்து சேவையானது தொடர்ந்து கிடைத்து வருகிறது. வழக்கமாக இயக்குவதற்கு என்ன அளவு தேவைப்படுமோ அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு பஸ்கள் நிச்சயமாக இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை: ஏனென்றால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். எனவே அந்த மக்கள் எந்த வித இடையூறுமின்றி சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். பேச்சுவார்த்தை தோல்வி அல்ல. பேச்சுவார்த்தை என்றால் இரண்டு பக்கமும் பேசி சுமூக முடிவு வர வேண்டும். அவர்கள் 6 கோரிக்கைகளை கூறினார்கள்.
அதில் ஏற்கனவே இரண்டு நடைமுறையில் இருக்கிறது. இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளோம். 6 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகள் நிறைவேறி இருக்கிற போது ஏன் வேலைநிறுத்தம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரே நாளில் எல்லாவற்றையும் செய்ய முடியாது. தெரிந்து ஏன் இந்த கோரிக்கையை அவர்கள் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications