லாக்டவுனில் டாஸ்மாக் மது கடைகள் மூடல்- எதிர்க்கட்சிகள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், அதில் டாஸ்மாக் எனும் காரணத்துக்கு 'டாப் 5' இடத்தில் நிச்சயம் இடமுண்டு.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த, நாளை (மே.10) முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.. ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இப்போதே காய்கறி தொடங்கி அனைத்துப் பொருட்களையும் முண்டியடித்து வாங்கி வருகின்றனர். அப்படி சில குடிமகன்கள் முண்டியடித்து வாங்கும் பொருட்களில் மதுவும் ஒன்று. சும்மா இல்ல.. ஒரே நாளில் 426 கோடி கலெக்ஷன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இல்லத்தரசிகள் நிம்மதி
இந்த நிலையில், தமிழக அரசின் நேற்றைய முழு ஊரடங்கு உத்தரவில், இரண்டு வாரங்களுக்கும் முழுமையாக டாஸ்மாக் திறந்திருக்காது என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனா குறித்து மணிக்கணக்கில் அட்வைஸ் செய்பவர்கள் கூட, 5 மணிக்கு டாஸ்மாக் கடையில் நிற்பதை பார்க்கும் சூழலில், டாஸ்மாக் மூடப்படும் என்ற அறிவிப்பு பல இல்லத்தரசிகளின் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஆஃப் செய்த முதல்வர்
முன்னதாக, லாக் டவுன் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை, டாஸ்மாக் கடைகள் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கி வந்தது. இந்த நிலையில், திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விவகாரத்திலும் திமுக அரசிடம், "டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு அத்தியாவசிய கடைகளின் நேரத்தைக் குறைப்பதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து அவர், "டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு நேரத்தில் கட்டாயம் மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு அத்தியாவசிய கடைகளின் நேரத்தைக் குறைப்பதா? டாஸ்மாக்கை மூடிவிட்டு அத்தியாவசிய கடைகளின் நேரத்தை மாலை 6 மணி வரை நீட்டிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
ராமதாஸ்
இந்த சூழலில் தான், நேற்றைய உத்தரவில், முழு ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் மூடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேசமயத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களது பல்லாண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.
அரசின் வருமானம்
அதில், "குடும்பத்தை மறந்து குடி, உடல்நலக்கேடு என சீரழிந்து கொண்டிருந்த பலர் ஊரடங்கின் பயனாக மதுவை மறந்து குடும்பத்தினருடனும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பர். இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமாகும். இதற்கு ஒரே தீர்வு ஊரடங்குக்காக மூடப்படும் மதுக்கடைகள் மூடப்பட்டவையாகவே இருப்பது தான். மதுக்கடைகள் மூடப்பட்டால் தமிழக அரசின் வருமானம் போய்விடும் என்று கவலைப்படத் தேவை இல்லை. தமிழக அரசின் இன்றைய ஆண்டு வருமானத்திற்கு இணையான தொகையை வரியில்லா வருவாய் ஆதாரங்களின் மூலம் ஈட்ட முடியும்" என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.
செய்வாரா ஸ்டாலின்?
முழு ஊரடங்கு மூலம், சீமானின் கேள்வியை ஆஃப் செய்த ஸ்டாலின், ராமதாஸ் கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், பூரண மதுவிலக்கு என்பது பாமகவின் பல வருட கோரிக்கை. ஆனால், டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கும் கொழுத்த லாபம் காரணமாகவே, இது தொடர்ந்து இயங்கி வருகிறது. அதனை மூடும் பட்சத்தில் அரசு இயந்திரம் சுழல்வதில் சிக்கல் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, முழு மதுவிலக்கு அமலானால் அந்த கிரெடிட்டை பாமக அப்படியே எடுத்துக் கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேல், பூரண மதுவிலக்கு அமலாகும் பட்சத்தில், குடிமகன்கள் கொப்பளிக்கும் கோபம் மோசமாக இருக்கும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுவதையும் புறந்தள்ளிவிட முடியாது.