பாஜக குறியே வேற.. மோடியின் பேச்சை கேட்பாரா எடப்பாடி பழனிசாமி..? - இத்தனை மெனக்கெடலும் அதற்குத்தானா?
சென்னை : அதிமுக விவகாரம் தொடர்பாக பாஜக தலைமையின் கணக்கு வேறொன்றாக இருக்கும் சூழலில், பிரதமர் மோடியின் அறிவுரையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே பாஜக தலைமையின் ஆதரவைப் பெற்று விட வேண்டும் என துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இருவரையுமே சந்திப்பதை தள்ளிப்போட்டு வருகிறார் பிரதமர் மோடி. இன்று பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் மோடி உடனான சந்திப்புக் கனவு நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, இன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அந்த நேரத்தில், பாஜகவின் முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி. அப்போது பிரதமரை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். இந்தச் சந்திப்பு நிகழுமா என்பதுதான் தமிழக அரசியல் அரங்கின் முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி.

சந்திக்கவில்லை
தனித்தனியாக டெல்லிக்குப் படையெடுத்துச் சென்றும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவராலும் பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்துப் பேச முடியவில்லை. தொடர் அலுவல்கள், நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியால் இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், அதிமுகவில் நிகழ்ந்து வரும் இந்த மோதல், கூட்டணிக்கு பாதகமாக அமையும் என்பதாலேயே பிரதமர் மோடி யாரையும் தனியாகச் சந்திக்கவில்லை என்றும் ஒரு தகவல் பரபரத்தது.

சந்திப்பு நடக்குமா?
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே கடுமையாக முரண் பட்டு, மாறி மாறி கட்சியினரை நீக்கி வருகின்றனர். நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டு வருகின்றனர். இருவரும் மாறி மாறி எதிர் தரப்பை விமர்சித்தும், குடைச்சல் கொடுத்தும் வருகின்றனர். தற்போது உச்ச நீதிமன்றத்திலும், அதிமுக தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இன்றும் பிரதமர் மோடி இருவரையும் சந்திக்க வாய்ப்பு இல்லை என்றும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

பாஜக தலைமையின் யோசனை
அதிமுகவில் தற்போது நிகழ்ந்து வரும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மோதலை பாஜக தலைமை ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜக வலுவாகக் காலூன்றுவதற்கு தற்போதைய சூழலில் அதிமுக அவசியம். அதிமுகவோடு கூட்டணி அமைத்ததன் காரணமாகத்தான் முதல் முறையாக 4 எம்.எல்.ஏக்கள் தமிழகத்தில் பாஜகவிற்கு கிடைத்தனர் என்பதால், அதிமுக கூட்டணியை தற்போது கைவிட பாஜக தயாராக இல்லை. பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுகவின் இரு தலைமையும் ஒன்றாக இருப்பதும் அவசியம்.
Recommended Video

அட்வைஸ்?
எனவே, இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் பிரதமர் மோடி சந்தித்தால், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றே வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் பகையை மறந்து முன்பு போல இணைந்து செயல்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிக்கு வழி ஏற்படுத்தித் தரக்கூடாது என்றும் பிரதமர் மோடி அட்வைஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா?
பிரதமர் மோடியின் அட்வைஸை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. காரணம், அதிமுகவில் தனக்குத்தான் செல்வாக்கு அதிகம் இருப்பதை பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு மூலம் நிரூபித்தாகி விட்டது, இனி ஓபிஸ்ஸை நாடி இருந்து செயல்பட வேண்டிய அவசியமில்லை என்கிற முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

பிறகு ஏன் மெனக்கெடல்?
அதே கருத்தையே ஈபிஎஸ்ஸின் ஆதரவாளர்களும் வெளிப்படுத்துகிறார்கள். மேலும், அதிமுக விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடாது என்றும் ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியைச் சந்திக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்க முடியாது என்ற நிலையிலும் ஏன் மோடியைச் சந்திக்க மெனக்கெடுகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வேறு காரணம்?
பிரதமர் மோடி, ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பையே வலியுறுத்துவார் எனத் தெரிந்தும், அவரைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி விரும்புவதற்குக் காரணம், ஓபிஎஸ் தனியாக சந்தித்து, அவருக்கு பாஜக தலைமை ஆதரவு கொடுத்தால், ரெய்டு, வழக்குகள் என தனது நிலைமை சிக்கலாகிவிடும் என நினைக்கிறாராம். அதன் காரணமாகவே, பாஜக தலைமையின் ஆதரவு ஓபிஎஸ் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காகவே கட்சியில் நிலைமையைச் சொல்லி ஓபிஎஸ்ஸை ஒதுக்கி வைக்க வலியுறுத்தி டெல்லியை முட்டி மோதுகிறார் ஈபிஎஸ் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications