சிடி ஸ்கேன் எடுத்தீங்களா? பதறியடித்து போய் பார்த்த எடப்பாடி.. அங்கேயே கொடுத்த சத்தியம்.. நெகிழ்ச்சி!
சென்னை: அதிமுக பொதுக்குழு முடிந்த பின் ஜெயலலிதா நினைவிடம் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து பின்னர் மருத்துவமனைக்கு சென்றார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
ஓபிஎஸ் எதிர்ப்பிற்கு இடையில் உயர் நீதிமன்ற அனுமதியோடு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.

பொதுக்குழு
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு இடையில் அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றினார். அப்போது அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போராட்டம் செய்தனர். இதன் காரணமாக ஓபிஎஸ் - எடப்பாடி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரண்டு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். மாறி மாறி கற்களை வீசி இரண்டு தரப்பும் தாக்கிக்கொண்டனர்.

மோதல்
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 10 பேர் இந்த மோதலில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் கையிலும், தலையிலும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த எடப்பாடி ஆதரவாளர்கள் சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இவர்களை நேரில் சென்று சந்தித்தார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி மரியாதை செய்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பேட்டி
அங்கு இரண்டு தலைவர்களின் நினைவிடத்தில் மரியாதையை செலுத்திவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், அதிமுக பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல பிரச்சினைகள் நிகழ்ந்தன.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தோம். சமூக விரோதிகள் அத்து மீறி தலைமைக்கழகத்தில் நுழைந்துள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவில்லை.

எடப்பாடி
அத்துமீறி அலுவலகத்திற்கு நுழைந்த ஓ. பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். ரவுடிகளை கட்சி அலுவலகத்திற்குள் நுழைய விட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். இதையடுத்து நேரடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்தார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.

காயம்
காயம் அடைந்தவர்களுக்கு பழங்களை கொடுத்த எடப்பாடி.. என்ன நடந்தது என்று விசாரித்தார். நன்றாக ஓய்வு எடுக்கும்படி கூறினார். அதோடு உங்களை தாக்கியவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்கு கொடுத்தார். பின்னர் மருத்துவர்களிடம் இவர்களுக்கு தலையில் அடிபட்டுள்ளதே சிடி ஸ்கேன் எடுத்தீர்களா கேட்டார். அதற்கு ஸ்கேன் ரிசல்ட் இன்னும் வரவில்லை என்று விளக்கம். அளித்தனர்

நெகிழ்ச்சி
இன்று எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு முடித்ததும் ஜெ சமாதி சென்றுவிட்டு அங்கிருந்து அதிமுக அலுவலகம் செல்வார் என்றே திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்ல முடியவில்லை. அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில்தான் அங்கு நடந்த மோதலில் காயம் அடைந்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் சந்தித்தார். எடப்பாடியே இப்படி வந்து பார்த்தது காயம் அடைந்த நிர்வாகிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications