தங்கம் விலை நாளைக்கும் குறையுமா? சர்வதேச சந்தை எப்படி இருக்கிறது? தெரிஞ்சுக்கோங்க
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. இந்த நிலையில் நாளையும் தங்கத்தின் விலை குறையுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதை தெரிந்துக் கொள்ள வேண்டும் எனில், சர்வதேச சந்தையின் நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
தங்கத்தை பொறுத்தவரை ஒரு விஷயத்தை கவனத்தில் நாம் வைத்திருக்க வேண்டும். அதாவது தங்கம் எமர்ஜென்சி காலத்தில் மட்டுமே அதிக அளவில் நாடப்படும். நிலைமை சரியாகிவிட்டது எனில், முதலீட்டாளர்கள் தங்கத்தை கைவிட்டு விடுவார்கள். தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்திருப்பதற்கு இதுவே காரணம்.

இந்த மாதம் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் புதிய உச்சங்களைத் தொட்ட பிறகு, தற்போது சற்று குறைந்திருக்கின்றன. இன்று உலக அளவில் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,004 ஆக 2.9% சரிந்தது. நேற்று இது 6.3% சரிவை சந்தித்தது, இது பன்னிரண்டு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தினசரி வீழ்ச்சியாகும். வெள்ளி நேற்று 7.1% சரிந்த பின்னர், புதன்கிழமை 2% க்கும் அதிகமாகச் சரிந்து சுமார் $47.6 ஆக இருந்தது. இந்த திடீர் சரிவு, லாபத்தை ஈட்டும் நோக்கில் முதலீட்டாளர்கள் செயல்பட்டதைக் காட்டுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX)தான் தங்கம், வெள்ளி விலையை நிர்ணயிக்கிறது. இன்று இது மூடப்பட்டிருக்கிறது. எனவே விலை குறைவு என்பது பெரிய அளவுக்கு லோக்கல் மார்க்கெட்டில், அதாவது உள்ளூர் நகைக்கடைகளில் எதிரொலிக்கவில்லை. ஆனால் நாளை மார்க்கெட் திறக்கப்படும்போது இந்த விலைச்சரிவு எதிரொலிக்கும். விலை குறைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு தங்கத்தின் விலை 56% என அதிகரித்திருந்தது. 10 கிராம் ரூ.1.35 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதுவே சவரன் கணக்கில் பார்த்தால் கடந்த 2024ம் ஆண்டு ஒரு சவரன் ரூ.47,000-50,000 என்றுதான் இருந்தது. இந்த ஆண்டு ரூ.95,0000ஐ தொட்டது. இதற்கு காரணம் சர்வதேச அளவில் எழுந்த பதற்றம்தான். குறிப்பாக அமெரிக்கா-சீனா மோதல்கள், ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் காரணமாக இருந்தன.
இந்நிலையில், இந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவை எட்டியிருக்கின்றன. வர்த்தகர்கள் தற்போது தங்கம் அல்லாத மற்ற பொருளாதாரக் காரணிகள், குறிப்பாக அமெரிக்கப் பணவீக்கம் மற்றும் அதன் நாணயக் கொள்கை அறிவிப்புகள் மீது கவனம் செலுத்துகின்றனர். அதேபோல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். எனவே உலகளாவிய வர்த்தக கவலைகள் சற்றே தணிந்துள்ள. இதனால், தங்கத்தை தேடி போகாமல் மற்ற வர்த்தக பாதைகளை வர்த்தகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இருப்பினும் இதெல்லாம் தற்காலிகமான விஷயங்கள்தான். எதிர்க்காலத்தில் டாலரின் மதிப்பு தொடர்ந்து சரியும். எனவே தங்கத்தை தேடிதான் பலரும் போவார்கள். இது விலை உயர்வை மேலும் அதிகரிக்கும். எனவே தங்கத்தில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications