பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஆகிறாரா அண்ணாமலை? செய்தியாளர்கள் கேள்விக்கு கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு அதற்கு பிறகு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் அண்ணாமலைக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு அக்கட்சி வட்டாரத்தில் எழுந்தது. இது குறித்து இன்று மாலை செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு இன்னும் 15 நாட்கள் பொறுத்திருங்கள் என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்த அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டார். அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட இருந்த நிலையில், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக விடாப்பிடியாக இருந்ததாகவும் இதையடுத்தே அவரை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றியதாகவும் சொல்லப்பட்டது.

அண்ணாமலைக்கு பதவி
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. 'கட்சியின் விசுவாசமான காரியகர்த்தா' என அண்ணாமலை சொல்லிக்கொள்ளும் நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது.
இதற்கிடையேதான் அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சும் அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. அண்ணாமலையை பொறுத்தவரை அதிரடியாக பேசக்கூடியவர். அவர் தமிழக பாஜக தலைவராக இருந்த போது, அளித்த அதிரடியான பேட்டிகள் தமிழக அரசியல் களத்தில் பாஜகவை மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெறும் கட்சிகளில் ஒன்றாக வைத்து இருந்தது.
பாஜக பொதுச்செயலாளர் பதவி
அண்ணாமலையை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம், கன்னடா, இந்தி என பல மொழிகள் அறிந்தவர். இதனால், அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியமான பொறுப்பை வழங்கினால், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அவருடைய பேச்சை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமித்ஷா - பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு வரை பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. எனவே, அண்னாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு அதிகரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் பாஜக தேசிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. எனவே, அப்போது, அண்ணாமலை பதவி தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை பதில்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலையிடம் பாஜக பொதுச்செயலாளர் ஆகப்போகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்னாமலை, 15 நாட்களில் இது குறித்து பதிலளிப்பதாக கூறிவிட்டு சென்றார். அண்ணாமலையும் பிடி கொடுக்காமல் பதிலளித்து இருப்பதன் மூலம் விரைவில் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்று பரவும் செய்திக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது என்று பாஜகவினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications