வேற லெவல்.. திமுக, அதிமுகவுக்கு "செக்".. வச்சு செய்ய போகும் கமல் & தினகரன்.. இதுவா "காமெடி கூட்டணி"?
கமலும் தினகரனும் திராவிட கட்சிகளின் ஓட்டை பிரிப்பார்கள் என்று தெரிகிறது
சென்னை: கமல்ஹாசன் சரத்குமார் கூட்டணி குறித்தும், தினகரன் ஓவைசி கூட்டணி குறித்தும் பலரும் கேலியாக பேசி வருவதைக் காண முடிகிறது. ஆனால் இந்தத் தேர்தலில் இந்த இரு கூட்டணியும் சேர்ந்து நிறைய பாதகங்களை திமுகவுக்கும், கொஞ்சம் அதிமுகவுக்கும் கொடுக்கப் போகின்றன என்பது அரசியல் புள்ளிவிவர நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இந்தக் கூட்டணியை குறைத்து மதிப்பிட்டால் நிச்சயம் திமுக மற்றும் அதிமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
தமிழகத்தின் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் கமல்ஹாசனுக்கு மிக நல்ல பெயர் உருவாகியுள்ளது. இது பிடிக்கிறதோ இல்லையோ ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்... குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல பெயர் காணப்படுகிறது.

திமுக
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தர வேண்டும் என்று இன்று பலரும் அள்ளி விட்டு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். ஆனால் இதற்கான விதை கமல்ஹாசன் போட்டது... கமல் சொன்னதை இன்று திமுக உள்ளிட்ட அனைவருமே காப்பி அடிக்க ஆரம்பித்துள்ளனர். கமல் சொன்னதைக் காப்பி அடிச்ச கட்சி என்ற கெட்ட பெயரை திமுக இன்று சம்பாதித்து விட்டது.. இது அண்ணா, கருணாநிதி வளர்த்த கட்சியான திமுகவுக்கு பெரும் அவப்பெயரையே தேடி கொடுத்துள்ளது.

அதிமுக
நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம்.. கமல்ஹாசனுக்கு போட்டுப் பார்ப்போம் என்ற கருத்து அழுத்தமாக எழ ஆரம்பித்துள்ளது. இதன் விளைவை திமுகதான் அனுபவிக்க போகிறது. காரணம், அதிமுகவை விட திமுகவுக்குத்தான் நகர்ப்புற, படித்த வாக்காளர்களிடையே சற்று செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கில்தான் ஓட்டை போடப்போகிறார் கமல்ஹாசன் என்று சொல்கிறார்கள்.

கமல்
குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் இந்த முறை கமல்ஹாசனின் கட்சி ஆச்சரியத்தை நிகழ்த்தப் போவதாக இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டனர். திமுகவினர் பலர் வெற்றி பெற்று விட்டதாகவே மிதப்பில் இருப்பதாகவும், அதுவே அவர்களுக்கு ஆப்பு வைத்து விடும் என்ற பேச்சையும் கேட்க முடிகிறது. இதுவே மக்கள் நீதி மய்யத்தினர் மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்துள்ளது.

சரத்குமார்
சரத்குமார் இணைந்திருப்பது கமல்ஹாசனுக்கு சற்று சாதகமான அம்சம்தான். காரணம், சரத்குமாரை என்னதான் நாடார் சமுதாயப் பிரதிநிதியாக சிலர் சித்தரித்தாலும் கூட அவர் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவராகவே தன்னை நிலை நிறுத்தி வருகிறார் ஆரம்பத்திலிருந்தே. தன்னை ஒரு ஜாதிப் பிரியராக ஒருபோதும் அவர் காட்டிக் கொள்ள விரும்பியதில்லை. மாறாக சமுதாயம் சார்ந்த விசாலப் பார்வையைத்தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார். நல்ல டீசன்ட்டான அரசியல்வாதி என்ற பெயரும் அவருக்கு உள்ளது. அது கமல் கட்சிக்கும் வலுவூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

தலைவலி
மறுபக்கம் பார்த்தால் அமமுக. கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் நல்ல தாக்கத்துடன் இருக்கும் கட்சி.. நிச்சயம் பல தொகுதிகளில் இந்தக் கட்சியால் திமுகவுக்கு தலைவலி ஏற்படப் போவது உண்மை. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அமமுக ஆப்பு வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கூடவே ஓவைசியும் கை கோர்த்துள்ளார். இவரால் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஆனால் போட்டியிடப் போகும் 3 தொகுதிகளிலும் நிச்சயம் தாக்கத்தை இந்தக் கட்சி ஏற்படுத்தும் என்பதால் அந்த 3 தொகுதியிலும் போட்டியிடும் கட்சிகளுக்கு சிக்கல்தான்.

கழகங்கள்
கமல்ஹாசன் கூட்டணியையும் தினகரன் கூட்டணியையும் கேலி செய்யும் இரு பெரும் கழகங்களும் அவர்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியம் காட்டினால் நிச்சயம் பின்விளைவுகளை வாக்காளர்கள் ரூபத்தில் சந்திக்க நேரிடும் என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நாளை தேர்தலில் சொற்ப வாக்குகளில் திமுக அல்லது அதிமுக கூட்டணியின் வேட்பாளர்கள் தோல்வி அடையும் தொகுதிகளில் நிச்சயம் அந்த தோல்விக்கு கமல் அல்லது தினகரன் கூட்டணியே காரணமாக இருக்கும் என்றும் இப்போதே சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications