"கனிமொழி"யை விடவா.. 3 வருட வலிகள்.. 3 ஏமாற்றங்கள்.. திமுகவுக்கு லட்டு சான்ஸ்.. அனலடிக்கும் அறிவாலயம்
கனிமொழிக்கு துணைப்பொது செயலாளர் பதவி வழங்க ஆதரவாளர்கள் வலியுறுத்துகிறார்கள்
சென்னை: திமுக எம்பி கனிமொழி குறித்த ஒரு முக்கிய கோரிக்கையை, அவரது ஆதரவாளர்கள் எழுப்பி வருகிறார்கள்.. இதனால், அறிவாலயத்தில் அனல் அடித்து கொண்டிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவை பொறுத்தவரை ஐபேக் டீமின் பங்கு அளப்பரியது.. கடந்த ஒரு வருடமாகவே கூடவே இருந்து, களப்பணியாற்றி எத்தனையோ தகவல்களை தலைமைக்கு திரட்டி தந்துள்ளது ஐபேக்...
இதில் கனிமொழி குறித்த சில விஷயங்களையும் ஐபேக் தலைமைக்கு அனுப்பி வைத்ததாக ஒரு செய்தி வட்டமடித்தது. அதாவது, கடந்த நவம்பர் 29-ம் தேதியே கனிமொழி தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்..

கனிமொழி + ஐபேக்
அதிலும் தென்மாவட்டத்தை குறி வைத்தே பிரச்சாரத்தை துவக்கினார்.. இதன் ரிசல்ட்தான், தென்மண்டலங்களில் திமுகவின் வாக்கு வாங்கி அதிகரித்ததில் தென்பட்டது.. அதாவது, பெருமளவு அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு டிரான்ஸ்பர் ஆனதில், மிக முக்கிய பங்கு கனிமொழிக்கு இருப்பதாகவும் அப்போது கூறப்பட்டது. இப்படி, கனிமொழி திமுகவுக்காக எடுத்து கொண்ட சிரத்தைகள், ஓட்டு வங்கியை பலப்படுத்தி இருப்பதாகவும், தென்மண்டல பகுதி மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு இந்த முறை உயர்ந்துள்ளதற்கு அடித்தளமாக இருந்ததே கனிமொழிதான் என்றும், ஸ்டாலினிடம் ஐபேக் டீம் அப்போது தெரிவித்ததாம்.

கனிமொழி
இதையடுத்து, கனிமொழிக்கு முக்கிய பதவியை தர ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.. அநேகமாக ஒன்று, தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி அல்லது கேஎன் நேரு வகித்து வரும் முதன்மை செயலாளர் பதவியை 2ஆக பிரித்து, தென்மண்டலங்களுக்கான முதன்மை செயலாளர் பதவியை கனிமொழிக்கு தர போவதாக சலசலக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே போஸ்டிங் தரப்படவில்லை.

தெற்கு போஸ்டிங்
அதேபோல, தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு தரும்படி கடந்த 2 வருடங்களுக்கு முன்னேயே அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.. சட்டசபை தேர்தலுக்கு முன்பேயே, கனிமொழிக்கு இந்த பதவியை தந்தால், அது திமுகவுக்கு கூடுதல் பலத்தை உருவாக்கும் என்றும், அமமுக, அதிமுகவின் செல்வாக்கை எளிதாக குறைத்து விடலாம் என்றும் கனிமொழியின் ஆதரவாளர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள்.. அதுமட்டுமல்ல, அன்று கருணாநிதி இருந்தபோது அழகிரி எப்படி செயல்பட்டாரோ, அதுபோலவே தென்மண்டலத்தை தன் வசம் கனிமொழி கொண்டுவந்துவிடுவார் என்றும் வலியுறுத்தியபடியே வந்தனர்.. ஆனால், அப்படி எதுவுமே போஸ்டிங் தரப்படவில்லை.

டிஆர் பாலு
கடந்த எம்பி தேர்தல் முடிந்ததுமே நாடாளுமன்ற திமுக குழு தலைவர் பதவி கனிமொழிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. திமுகவுக்குள்ளேயே பலத்த போட்டி இருந்தது... இந்த பதவியை பிடிக்க டிஆர் பாலு - கனிமொழி இடையேதான் அதிகமான ரேஸ் இருந்துள்ளது.. ஆனால், கடைசியில் டிஆர் பாலுவுக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட, திமுக மக்களவை குழு துணை தலைவராகவே கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். இதனால் கனிமொழிக்கு லேசான வருத்தம் அப்போது இருந்ததாகவும் கூறப்பட்டது.. எனினும், இதிலும் எதிர்பார்த்த போஸ்டிங் எதுவும் தரப்படவில்லை.

சாய்ஸ் 1
இதனால் கனிமொழி தரப்பில் மிகுந்த அப்செட்டுக்கு ஆளானதாக செய்திகள் கசிந்தபடியே இருந்தன.. இப்போது மீண்டும் கனிமொழியின் பெயரை அவரது ஆதரவாளர்கள் முன்னிறுத்தி வருகிறார்கள்.. திமுகவின் உயர்மட்ட பொறுப்புகளில் ஒன்றான துணைப்பொதுச்செயலாளர் பதவியை, சுப்புலெட்சுமி ஜெகதீசன் திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த பதவிக்கு கனிமொழியின் பெயர் அடிபட துவங்கி உள்ளதாம்.. "தூத்துக்குடி எம்பி" என்ற அளவிலேயே அரசியல் முடங்கிப்போய்விட்டதாக கனிமொழி ஆதரவாளர்கள் அதிருப்தியிலும் ஆதங்கத்திலும் உள்ள நிலையில், கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனராம்..

சாய்ஸ் 2
ஆனால், இதற்கு நடுவில் இன்னொரு கோரிக்கையை உள்ளே நுழைக்கிறது ஒரு தரப்பு.. அதாவது, கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு தற்சமயம் உயர ஆரம்பித்துள்ள நிலையில், அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்துவந்த பதவியை கொங்கு மண்டலத்தை சேர்ந்த இன்னொரு பெண்மணிக்கே வழங்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைக்க துவங்கி உள்ளார்களாம்..

சாய்ஸ் 3
இதில் மற்றொரு தகவலும் முணுமுணுக்கப்படுகிறது.. சுப்புலட்சுமி ஜெகதீசனை அவ்வளவு சீக்கிரம் மேலிடம் விட்டுவிடாது.. கட்சியின் சீனியர் என்பதால், வருத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதால், நிச்சயம் அவரை அழைத்து, தலைமை விரைவில் பேச்சு நடத்தக்கூடும், இந்த பிரச்சனை சுமூகமாக பேசி தீர்க்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.. ஆனால், ஒருசிலர் அவரின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வோம், புது நபரை பொறுப்பில் நியமிக்கலாம் என்று சொல்லி வருகிறார்களாம்.

பெஸ்ட் சான்ஸ்
அதேசமயம், கனிமொழிக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. மிகப்பெரிய பதவியை, கொங்குவுக்கு என்று பிரித்து காட்டாமல், அனைவருக்குமான ஒரு பொதுவான தலைவரையே நியமிக்க வேண்டும், அதற்கு கனிமொழிதான் பெஸ்ட் சாய்ஸ் என்கிறார்கள்.. அநேகமாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ள, பொதுக்குழுக் கூட்டத்தில் கனிமொழி, துணை பொதுச்செயலராக தேர்வு செய்யப்படுவார் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. இப்படி பல்வேறு யூகங்கள் றெக்கை கட்டி பறந்து வரும் நிலையில், என்னதான் நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications