தனது நண்பரை கவுரவிக்க... மீண்டும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா... சிதம்பரம் கேள்வி!!
சென்னை: கொரோனா உயிரிழப்பை இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மறைக்கின்றன என்றும் இந்த நாடுகளில் இருந்துதான் காற்று மாசு அதிகளவில் ஏற்படுகிறது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்தார். இவ்வாறு கூறி இருக்கும் தனது உற்ற நண்பருக்கு மீண்டும் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்துவாரா என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று பாக்ஸ் செய்தி சேனல் நடத்தி இருந்த நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ஜோ பைடன் கேட்டு இருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை ட்ரம்ப் கடுமையாக சாடி இருந்தார்.
கொரோனா நோயாளிகளை குதூகலிக்க வைக்கும் திருமூர்த்தி... பாடலால் பறந்துபோன கவலைகள்..!
நண்பர்
இதுவரைக்கும் இந்தியாவையும், பிரதமர் மோடியையும் பல தருணங்களில் ட்ரம்ப் பாராட்டி, புகழ்ந்து பேசி வந்துள்ளார். பிரதமர் மோடியை தனது நண்பர் என்றும் கூறி இருந்தார். கொரோனா பரவிய துவக்கத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மருந்து அனுப்பப்பட்டது. அப்போது இந்திய மக்களையும், மோடியையும் வெகுவாக பாராட்டி இருந்தார்.
நமஸ்தே ட்ரம்ப்
இதற்குப் பின்னரும், அமெரிக்க வாழ் இந்திய மக்களின் வாக்குகளை பெறும் வகையில் அவர்களை புகழ்ந்து பேசி வந்தார். இதற்கு முன்னதாக இந்தியாவுக்கு ட்ரம்ப்பை அழைத்து வந்து நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சியை மோடி நடத்தி இருந்தார். அதற்கு முன்பு அமெரிக்காவில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருந்தது.
காற்று மாசு
இந்த நிலையில் நேற்று நடந்த விவாதத்தில் இந்தியாவை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஜோ பைடன் அமெரிக்காவில் பரவி இருக்கும் கொரோனா குறித்து கேட்டபோது, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உண்மையான உயிரிழப்பை மறைக்கின்றன. அந்த நாடுகளில் இருந்துதான் காற்று மாசு அதிமாக ஏற்பட்டுள்ளது என்று கூறி இருந்தார். இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
மீண்டும்
இதை விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், ''கொரோனா உயிரிழப்பில் உண்மையை இந்தியா, சீனா, ரஷ்யா மறைப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். காற்று மாசுக்கும் இந்த நாடுகளை குற்றம்சாட்டியுள்ளார். இன்னொரு முறை தனது நண்பரை அழைத்து அவரை கவுரவப்படுத்தும் வகையில் 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சியை நடத்துவாரா மோடி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வேதனை
மேலும் நேற்றைய பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பாக வெளியான தீர்ப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், உச்சநீதிமன்றம் அளித்து இருந்த தீர்ப்பை மறுக்கும் வகையிலும், பொது அறிவு மற்றும் தர்க்கத்தை மீறும் வகையில் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. யாருமே மசூதியை இடிக்கவில்லை என்பது இன்றைய வேதனையான அழுகையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.