ஸ்டிரைட்டாக ஸ்டாலினுக்கே குறி வைக்கும் சீமான்.. என்னவா இருக்கும்.. கவனத்தை இழுக்கும் "கொளத்தூர்"
ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட போகிறாரா?
சென்னை: ஒருவேளை ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி இயல்பாகவே நமக்குள் எழுந்து வருகிறது!
சென்ற எம்பி தேர்தலிலேயே, அதிமுகவை விட்டுவிட்டு திமுகவை கட்டம் கட்டி பேசி கொண்டிருந்தார் சீமான்.. முழு முதற் குறி ஸ்டாலின் மட்டுமே இருந்தது.. அவரது பிரச்சார நெடி முழுவதுமே திமுகவாக மாறி வெடித்தது.
அதுபோலவே இப்போதும் திமுகவை நேரடியாகவே குறி வைத்துள்ளார் சீமான்.. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போவதாக சொல்ல என்ன காரணம் என்று தெரியவில்லை.
தீபலட்சுமி
வேலூர் தொகுதியில் போட்டியிடும்போது, அக்கட்சி வேட்பாளர் தீபலட்சுமிக்கு கிடைத்த வாக்குகளானது, அதிமுகவை மட்டும் பதம் பார்க்கவில்லை... திமுகவையும் சேர்த்துதான் பதம் பார்த்தது.. திமுகவின் வாக்கு வித்தியாசத்தை விட 3 மடங்கு அதிகமாக தீபலட்சுமி வாக்குகள் பெற்றிருந்ததாக சொல்லப்பட்டது. ஸ்டாலினை எதிர்கொள்ள நினைப்பதற்கு, ஒருவேளை இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கொளத்தூர்
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு எதிராக சீமான் போட்டியிடும்போது என்ன மாதிரியான விளைவுகள் வரும் என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.. முதலாவதாக, அப்படி எதுவுமே பெரிசா விளைவுகள் வராது.. வேண்டுமானால் சீமானின் பேச்சு, ஸ்டாலின் பேச்சைவிட அனல் தெறிக்கும்.. தமிழர், தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்து அவரது தட்டி எழுப்பும் பேச்சுகள் நரம்பு புடைக்கும்.. கோபம் கொப்பளிக்கும்.. கைதட்டல் விண்ணை பிளக்கும்.. இதனால் சென்ற முறை போலவே, இந்த முறையும் யூடியூப்களில் சீமானின் கொந்தளிப்பு பேச்சுக்கள் வைரலாகும்.. டிரெண்டாகும்!
பண பட்டுவாடா
மற்றொரு விஷயம், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியினர் கொள்கையாக வைத்துள்ளனர்... அவர்களது நேர்மைக்கு வேலூரில் 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்ததே அதற்கு சாட்சியாக விளங்கி கொண்டிருக்கிறது.. இந்த முறையும் அவர்கள் பணம் தர மாட்டார்கள்.. மாறாக பணம் தரும் கட்சிகளை டார் டாராக கிழித்தெறிவார்கள்... இது நிச்சயம் இளம் தலைமுறையினரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப செய்யும்!
அரியணை
ஆனால், திராவிடக் கட்சிகளை வீழ்த்தும் அளவிற்கு நாம் தமிழருக்கு வாக்கு வங்கி இல்லை என்பதே உண்மை.. கட்சி ஆரம்பித்து 10 வருஷம் ஆனாலும், 3.87 சதவீத வாக்கு வங்கியை படிப்படியாக உயர்த்தி தக்க வைத்துள்ளது. அதற்காக, இந்த கட்சியை குறைத்து எடைபோட்டுவிட முடியாது... 2016ல் திமுகதான் அரியணை ஏறியிருக்க வேண்டியது.. வாக்கு வங்கியை அதிகமாக திமுக பெற்றிருந்தாலும், குறைவான தொகுதிகளை அக்கட்சி கைப்பற்ற தவறிவிட்டது.. இதற்கு காரணம், திமுகவின் வாக்குகளை பிரித்த பங்கு சீமானுக்குதான் போய் சேரும். இப்போதும் அதேதான் நடக்க போகிறது.
அதிமுக
10 வருஷமாக ஆட்சியை பிடிக்க முடியாமல் போராடி கொண்டிருக்கும் திமுகவுக்கு இந்த முறையும் பெரும் பிரச்சனையாக இருக்க போவது நாம் தமிழர் கட்சிதான்.. மலைபோல் உள்ள அதிமுகவை விட, தடுக்கி விடும் மடுபோல அபாயகரமானதுதான் நாம் தமிழர் கட்சி!
கோட்டை
கொளத்தூர் என்பது ஸ்டாலின் செல்ல தொகுதி.. ஏராளமான நலத்திட்டங்களை அந்த தொகுதிக்கு செய்து வைத்துள்ளார்.. திமுகவின் கோட்டையும்கூட.. கடந்த எம்பி தேர்தலின்போது, சீமான் பெற்ற வாக்கு சதவீதம் அதிகமானதாகவே இருந்தாலும், திமுகவை வீழ்த்தும் அளவிற்கு அது விஸ்வரூபம் எடுத்துவிடவில்லை. அப்படியே சீமான் போட்டியிட்டாலும், கடந்த முறை பெற்ற வாக்கு சதவீதத்தைவிட இந்த முறை குறையும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
பதிலடி
திமுக கட்சிக்கு சீமான் தான் மிக சிறந்த பதிலடி என்று ஒருசிலர் சொல்வதையும் மறுத்துவிட முடியாது.. இது தர்க்க ரீதியான வாதமே.. தமிழகத்தில் வழக்கமாக தேர்தலில் 2 தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுவதில்லை.. இதை சீமான் இந்த முறை உடைப்பாரா? ஒருவேளை சீமான் ஸ்டாலினை எதிர்த்து நின்றால், திமுகவின் வாக்குகள் பிரிந்து, பாஜகவின் வாக்குகள் கூடும் என்பதே அடிப்படை சூட்சுமம்!