மாற்றப்படும் செல்வப்பெருந்தகை? தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் யார்? போட்டா போட்டி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக செல்வப்பெருந்தகை கூறியிருந்த நிலையில், விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி தலைமை இது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில தலைவர் பதவியை பிடிப்பதற்கு கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர்
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்துள்ளது. வரும் மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்த தேர்தலில் காங்கிரசுடன் திமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டுள்ளது. நீண்ட நாட்கள் போராட்டத்துக்கு பிறகே திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. கடும் இழுபறிக்குப் பின்னர் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து பின்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
செல்வப்பெருந்தகை விலகல்
வேட்பாளர் பட்டியல் வெளியிடவும் நீண்ட நாட்கள் ஆகின. யாருக்கு சீட் கொடுப்பது என்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறியே நீடித்து வந்தது. மேலும் வேட்பாளர் பட்டியலில், தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அதிருப்திகள் வெளியாகின. வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஜோதிமணி எம்.பியும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
கட்சிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்த தகுதிவாய்ந்த பலருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் சாடியிருந்தார். இதற்கு பிறகு தேர்தல் பரப்புரையின்போது செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, "தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழக காங்கிரஸ் பதவியில் இருந்து விலக உள்ளேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. முழுக்க முழுக்க ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்காக பணி செய்ய உள்ளேன். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை" என்று கூறினார்.
மே 15 ஆம் தேதிக்குள்
செல்வப்பெருந்தகையின் முடிவை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாம். புதிய மாநில தலைவர் பதவியை பிடிப்பதற்கு கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி வெளியான பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதியவர்களும், முன்னாள் தலைவர்கள் சிலரும் தலைமைப் பதவிக்கான பட்டியலில் இருக்கிறார்கள் என்றும், எனினும் இதில் புதியவர் ஒருவருக்கே பொறுப்பை வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் மே 15 ஆம் தேதிக்குள் புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.














Click it and Unblock the Notifications