விஜய் மடியில் விழுந்த இதயக்கனி.. செங்கோட்டையனை வைத்து ஸ்கோர் செய்வாரா? கொங்கில் எடப்பாடிக்கு பிரஷர்?
சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் இந்த திடீர் முன்னேற்றம், அவர் தவெகவில் இணைவது உறுதி என்கிற கணிப்புகளை உறுதியாக்கியிருக்கிறது. அதேசமயம், அவர் இணைந்தால் தவெகவுக்கு பலமாக மாறுமா? செங்கோட்டையனின் செல்வாக்கை விஜய் பயன்படுத்திக் கொள்வாரா? என பல கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக செங்கோட்டையன் திகழ்கிறார். 1971 முதல் 10 முறை எம்எல்ஏவாக இருந்த துரைமுருகனுக்குப் பின், 1977 முதல் இதுவரை 9 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையை பெற்றவர் செங்கோட்டையன்.
எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை, அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

கேஏ செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை திரும்ப கட்சியில் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதும், இபிஎஸ் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதே கோரிக்கையை காரணம் காட்டியும், செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும், அதிமுகத் தொண்டர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், மாலை நேரத்தில் விஜய்யை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசியது, அடுத்த கட்ட அரசியல் மாற்றத்துக்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன் தவெகவில் இணைவது உறுதி என்றே அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்து விட்டன.
தவெக
அதே நேரத்தில் அவரது வருகை தவெகவுக்கு என்ன மாற்றத்தை கொடுக்கும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய் தனது கட்சியை தொடங்கி இரு ஆண்டுகள் ஆனாலும், இதுவரை எந்த பெரிய அரசியல்வாதியோ, திரைப் பிரபலங்களோ, முன்னாள் அதிகாரிகள் என்று யாரும் தவெகவில் இணையவில்லை. இது ஒரு பெரிய குறை. அந்த இடத்தை நிரப்பும் அளவுக்கு பெரிய நபர் செங்கோட்டையன். அவரின் இணைப்பு தவெகவுக்கு ஒரு தெளிவான பலம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கொங்கு மண்டலம்
குறிப்பாக கொங்கு மண்டலத்தை நன்கு அறிந்தவர் செங்கோட்டையன். அந்தப் பகுதியின் அரசியல், சமூக நிலை, வாக்கு வங்கிகள், பிரச்சினைகள் அனைத்திலும் அவருக்கு ஆழமான அனுபவம் உள்ளது. கொங்கு பகுதியில் காலடி பதிக்கத் தவெக முயற்சி செய்யும் காலத்தில், செங்கோட்டையனின் அனுபவம் விஜய்க்கு ஒரு பெரிய அரசியல் ஆதாரமாக இருக்கும். மேலும், எம்ஜிஆரை நேரில் பார்த்து, ஜெயலலிதாவின் பெரிய கூட்டங்களை மேலாண்மை செய்த அனுபவம் கொண்டவர் செங்கோட்டையன். தற்போது கூட்ட நெரிசல், நிர்வாக சவால்கள் போன்றவற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் தவெக தலைமைக்கு, அவரது அரசியல் அனுபவம் உதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.
செங்கோட்டையன் செல்வாக்கு
எனினும், தவெகவின் தற்போதைய முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றோர், செங்கோட்டையன் போன்ற சீனியரை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது இன்னொரு பெரிய கேள்வி. இதற்கு மாறாக, அதிமுக தரப்பில் செங்கோட்டையனின் பிரிவை இலகுவாக எடுத்துக் கொண்டுள்ளனர். "கொங்கு மண்டலத்தில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு கிடையாது. எம்ஜிஆர் காலம் என்பதால் எங்கள் கட்சியில் உயர்ந்த பதவிகள் கிடைத்தது தவிர, அவரால் தேர்தலில் எந்த அளவிலும் அதிமுகவின் செல்வாக்கு மாறாது என்கின்றனர் அதிமுகவினர்.
தவெக வலிமை
ஆனால் உண்மை என்னவெனில், செங்கோட்டையனின் நீக்கம் அதிமுக தொண்டர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒருங்கிணைப்பை விரும்பும் பழைய அதிமுக தலைவர்களிடையே இபிஎஸ் தலைமை பற்றிய அதிருப்தி அதிகரிக்கலாம். இதன் தாக்கமாக சில அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை பின்பற்றி தவெகவில் இணைய வாய்ப்பும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அரை நூற்றாண்டு அனுபவம் கொண்ட செங்கோட்டையன், முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் விஜயின் தவெகவுக்கு ஒரு வலிமைதான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
விஜய்
மேலும், அவர் பல கட்சி தலைவர்களுடனும் நல்ல உறவைக் கொண்டிருப்பதால், கூட்டணி அமைப்பிலும் அவர் ஒரு முக்கிய இணைப்புக் பாலமாக செயல்பட முடியும். ஆனால், செங்கோட்டையன் போன்ற மிக மூத்த அரசியல்வாதியை, இளம் தலைவர்கள் அதிகம் இருக்கும் தவெக எப்படி கையாளப் போகிறது? அதை விஜய் வருங்காலங்களில் சீனியரின் அனுபவத்தை எப்படி பயன்படுத்தப் போகிறார்? என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.












Click it and Unblock the Notifications