செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இடம் பெறுவாரா? திமுகவின் ஆர்எஸ் பாரதி டக்கென சொன்ன பதில்
சென்னை: உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆக்கபடலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினும் கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்துள்ள நிலையில், இன்று அல்லது நாளை மாலை புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட இருக்கிறார். செந்தில் பாலாஜி சிறையில் கைது செய்யப்பட்ட பிறகு இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆக்கபடலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினும் கூறியிருந்தார். இதனால், இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது செந்தில் பாலாஜிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு ஆர்.எஸ் பாரதி அளித்த பதிலை பார்க்கலாம். ஆர் எஸ் பாரதி கூறியதாவது:- செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து இருக்கிறார். தேவையற்ற ஒன்று என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
வழக்கின் தன்மைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கு இது. அந்த வழக்கிற்குள் நான் செல்ல விரும்பவில்லை. கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு தீவிரமாக பணியாற்றினார் என்பதற்காக, சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்தி வைத்துவிடலாம் என்று நினைப்பது போல.. செந்தில் பாலாஜியை உள்ளே வைத்து விடலாம் என நினைத்தார்கள்.
செந்தில் பாலாஜி வெளியே இருந்தாலும் உள்ளே இருந்தாலும் திமுகவின் செல்வாக்கை யாராலும் குலைக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தியா கூட்டணி 40க்கு 40 வெற்றி பெற்றது. செந்தில் பாலாஜி அமைச்சராக எந்த தடையும் இல்லை. தாமதிக்கப்பட்டது நீதிதான். தாமதிக்கப்பட்டது என்றால் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வேண்டும் என்றே திட்டமிட்டு இழுத்தடித்தது.
பாஜக இனிமேலேவாது திருந்த வேண்டும். காரணம் என்னவென்றால் அவர்கள் அரசியல்வாதிகள் மீது போட்ட எல்லா வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குட்டு கொடுத்து ஜாமீனில் விடுவித்து வருகிறது. இனியாவது திருந்தனும். இல்லாவிட்டால் பாஜகவிற்கு கேடு காலம் தான். செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இடம் பெறுவாரா ? என்பதை முதல்வரிடம் தான் கேக்க வேண்டும். இவ்வாறு ஆர் எஸ் பாரதி கூறினார்.












Click it and Unblock the Notifications