ரேஷன் கடைகளுக்கு விரைவில் முக்கிய உத்தரவு.. பணிச்சுமையை குறைக்க தமிழக அரசு அதிரடி..!
ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்புகள் நிரப்பப்பட உள்ளது
சென்னை: ரேஷன் கடைகளில் 4,000 ஊழியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு அறிவிப்பை, கூட்டுறவு துறை விரைவில் வெளியிட உள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக நன்மை அடைந்து வருகின்றனர்.
அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.. மற்றொரு புறம், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது.

பொது விநியோகத்திட்டம்
இதனிடையே, கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி கொண்டிருக்கிறது.. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, நியாய விலை கடைகளில் தமிழகம் முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.. நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.

முதல்வர் ஸ்டாலின்
அதேபோல, தமிழக சட்டப்பேரவையில், கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு ஐ பெரியசாமி பதிலளித்து பேசும்போது, நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

வேலைவாய்ப்பு
அதன்படியே குறிப்பிட்ட பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகின்றன.... அந்த வகையில் இப்போதைக்கு எடையாளர்கள், பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. கூட்டுறவு துறையின்கீழ் 33,000 ரேஷன் ரேஷன் கடைகள் இயங்குகின்றன.. இந்த கடைகளில் விற்பனையாளர், எடையாளர் என்று மொத்தம் 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்... கடைகளே 33 ஆயிரம் இருக்கிறது என்றால், ஊழியர்கள் வெறும் 25 ஆயிரம் பேர்தான் உள்ளனர்.. ஒரு கடைக்கு ஒரு பணியாளர்கூட இல்லாத அளவுக்கு பற்றாக்குறை இருக்கிறது.

பணியிடங்கள்
இதனால், அந்த வேலைகளையும் சேர்த்து இப்போது பணியில் உள்ளவர்களே, கூடுதலாக கவனித்து வருகிறார்கள்.. இதனால் அவர்களுக்கும் பனிச்சுமை கூடுகிறது.. எனவேதான், இவர்களின் பணிச்சுமையை குறைக்கும்விதமாக, மாவட்ட வாரியாக மொத்தம் 3,300 விற்பனையாளர்கள், 600 எடையாளர்கள் என மொத்தம் 4,000 பேர் விரைவில் நிரப்பப்பட உள்ளனராம்.. இந்த பணி நியமனங்களுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications