ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்..அடிச்சு தூக்கும் எடப்பாடி பழனிசாமி.. "நிறம்" மாறிய தினகரன்? விழிக்கும் ஓபிஎஸ்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்ற உத்தரவால், அடுத்தடுத்த நெருக்கடிகள் கூடிவருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு பிரத்யேகமான செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
இரட்டை தலைமை விவகாரம் அதிமுகவில் வெடித்ததில் இருந்தே, தினகரன், சசிகலா தரப்புடன் இணக்கமான போக்கை கொண்டிருந்தவர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ் போகிற போக்கை பார்த்தால், மறுபடியும் சசிகலா, தினகரனை அதிமுகவுக்குள் கொண்டுவந்துவிடுவாரோ என்ற அச்சம் காரணமே, கட்சியிலிருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

அமமுக தினகரன்: ஆனால், இந்த நிகழ்வுக்கு பிறகு, வெளிப்படையாகவே அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் நெருக்கத்தில் இருந்து வருகிறார் ஓபிஎஸ்.. ஒருகட்டத்தில், அமமுகவின் தலைமை பதவியையும் ஓபிஎஸ் ஏற்கக்கூடும் என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால், இதுவரை தன்னை அதிமுகவின் அடையாளமாகவே ஓபிஎஸ் பிரதிபலித்து கொண்டிருக்கிறார். மற்றொருபக்கம், தென்மண்டல வாக்குகளை அள்ளுவதற்காக, தினகரனுடன் இறுக்கமாக கைகோர்த்தும் உள்ளார்.
எப்படியும் இவர்கள் இருவரும் இணைந்து பாஜகவுடன் 3வது அணியை அமைக்கும் முயற்சியிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது. இவ்வளவு நெருக்கம் இவர்களிடம் இருந்தபோதிலும், சில விஷயங்களில், ஓபிஎஸ்ஸிடம் "கறார்" காட்டுகிறாராம் தினகரன்.. இதோ இப்போதுகூட ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு: நேற்றைய தினம், அதிமுக வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.. வெளிநாட்டில் இருந்தபடியே, உயர்நீதிமன்ற உத்தரவை அறிந்த ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, "நீங்கள் சென்னைக்கு திரும்புங்கள். விவாதிக்கலாம்" என்று சொன்னாராம் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இவர்களுடன் பேசியது மட்டுமல்லாமல், டிடிவி தினகரனையும் தொடர்பு கொண்டும் பேசினாராம் ஓபிஎஸ்.. ஓபிஎஸ் தன்னிடம் பேசியதை, அமமுக மாநில நிர்வாகியும், முக்கியஸ்தருமான ஒருவரிடமும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.
ஓபிஎஸ் டீம்: அதற்கு அந்த நிர்வாகி, "அவர்களது (ஓபிஎஸ் அணி) அரசியலை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். எந்த இடத்திலும் அவர்களது நலனையும் சேர்த்து நாம் அரசியல் முடிவுகளை எடுக்கக் கூடாது. ஏற்கனவே, ஓபிஎஸ்சுடன் அமமுக கூட்டணி வைக்கக்கூடாதுன்னு நம்முடைய தொண்டர்களெல்லாம் வலியுறுத்துகிறார்கள். அதனால அவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது" என ஒரு பிட்டை தூக்கிப் போட்டிருக்கிறார் அந்த மாநில நிர்வாகி.
அதற்கு தினகரனோ, "அதிமுகவை வசப்படுத்தி கொள்வதில் எடப்பாடியின் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. இனி எந்த முயற்சியிலும் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக எதுவும் நடந்துவிடப்போவதில்லை. அப்படியிருக்க, நம்முடைய சமூக வாக்குகளை கன்சாலிட்டேட் ஆகணும்னா ஓபிஎஸ்சை ஆதரிப்பதுதானே புத்திசாலித்தனம்?" என்றாராம் தினகரன்.
முக்குலத்தோர்: அதற்கு அந்த நிர்வாகி, "முக்குலத்தோரில் ஓபிஎஸ்சுக்கான ஆதரவு சொற்பளவில் மட்டும்தான்னு ஏற்கனவே நீங்க சொல்லியிருக்கீங்க. அதனால்தான் , அமமுக தனித்து போட்டியிடும்னு அறிவிக்கவும் செய்தீங்க... இப்போ ஓபிஎஸ்சை ஆதரித்து, ஒருவேளை நம்முடைய கூட்டணியில் அவரை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்தித்தால், அமமுக வாங்கும் ஓட்டுகள் என்னால் தான் கிடைத்ததுன்னு தேர்தலுக்கு பிறகு, ஓபிஎஸ் க்ளைம் பண்ணினால் அப்போது குழப்பம்தானே வரும்?" என்று கேட்டாராம்.
இதைக்கேட்ட தினகரன், "நீ சொல்றது சரிதான். அவர் அப்படி பேசக்கூடியவர்தான். தனித்துப் போட்டி என்பதில் நாம் உறுதியாகத்தான் இருக்கிறோம். சில விஷயங்களில் காம்ப்ரமைஸ் ஆகக்கூடாதுன்னு நானும் நினைக்கிறேன். பார்ப்போம்" என்று சொன்னாராம் டிடிவி தினகரன்.
சசிகலா: ஆக, இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ் தற்சமயம் சிக்கி உள்ளதால், தினகரன் தரப்பிலிருந்து உதவி எதுவும் கிடைக்க போவதில்லை.. அந்தவகையில், ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.. இந்த நேரத்திலாவது சசிகலாவின் "வெளிப்படையான" ஆதரவுக்கரம், ஓபிஎஸ் பக்கம் நீளுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications