திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை சீட்? என்னென்ன தொகுதிகள்? இன்று கையெழுத்தாகிறது?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே இன்றைய தினம் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தொகுதி பங்கீடுகள், கூட்டணி என படுபிஸியாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த முறை 3 தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு கேட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு 2 இடங்களை திமுக ஒதுக்கியது. அதில் சிதம்பரத்தில் பானை சின்னத்தில் தொல் திருமாவளவன் போட்டியிட்டு வென்றார். அது போல் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் விழுப்புரம் தனி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
கடந்த முறை பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திருமாவளவன் தற்போது தொகுதி மாறுவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிதம்பரம் தொகுதியிலேயே போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே கொங்கு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய முஸ்லீம் யூனியன் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் முறையே நாமக்கல், ராமநாதபுரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஒப்பந்தம் போட வேண்டியது உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இதனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.
அது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 தனி தொகுதிகளில் 3 தொகுதிகளையும், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய பொதுத் தொகுதியில் ஒரு தொகுதியையும் என மொத்தம் 4 தொகுதிகளை கேட்டு வருகிறது.
ஆனால் திமுகவோ கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கியதை போல் இரு தொகுதிகளை கொடுக்க முன் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதால் இன்று அண்ணா அறிவாலயத்தில் எம்பி திருமாவளவன் உள்ளிட்டோர் செல்கிறார்கள்.
அங்கு டிஆர் பாலு தலைமையிலான குழுவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசனை நடத்தும் என தெரிகிறது. இன்றைய தினம் தொகுதி பங்கீடு, எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி செய்யப்பட்டு திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்ட 4 தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வரலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளுடனான பேச்சுவார்த்தை இன்னமும் இறுதி செய்யப்படாத போது விசிகவுக்கு கூடுதல் தொகுதிகள ஒதுக்கினால் அது தேவையற்ற சிக்கலை ஏற்படும் என திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது. ஆனால் விசிகவோ 4 இல் உறுதியாக இருக்கிறதாம். எனவே யார் விட்டுத் தர போகிறார்கள் விசிகவா திமுகவா என்பது இன்று மாலை தெரியும்.












Click it and Unblock the Notifications