43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்? அடுத்த 24 மணி நேரத்தில் மாறுகிறதா வரலாறு
சென்னை: தமிழகத்தில் பல வருடங்களாகவே திமுக, அதிமுக என்ற 2 துருவங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த அரசியல் களம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ளது. குறிப்பாக, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால், என்.டி.ஆர் அன்று படைத்த அந்த இமாலய சாதனையை விஜய் முறியடிப்பாரா?" என்ற எதிர்பார்ப்புதான் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதமாக எழுந்துள்ளது.
இந்திய அரசியலில் சினிமாவிலிருந்து வந்து முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தவர்களில் முதன்மையானவர் என்.டி. ராமராவ்.. அதாவது 1982-ல் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவர், வெறும் 9 மாதங்களில் தேர்தலை சந்தித்தார்.

என்டிஆரை முந்துவாரா விஜய்
அந்தத் தேர்தலில் என்டிஆர் 46.30 சதவீத வாக்குகளை பெற்று 201 இடங்களை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தார். இது இன்றுவரை ஒரு உலக சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், அன்றைய ஆந்திராவில் நிலவிய அரசியல் வெற்றிடமும், டெல்லி மேலிடத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான "தெலுங்கு மக்களின் தன்மானம்" என்ற அவரது முழக்கமும்தான். எம்.ஜி.ஆர் கூட தனது முதல் தேர்தலில் 33.52 சதவீத வாக்குகளையே பெற்றிருந்த நிலையில் என்டிஆர் பெரிய சாதனை படைத்திருந்தார்.
விஜய்க்கு கிடைத்தது அதிர்ஷ்டமா?
தவெக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று 1 கோடிக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது.. இதனை விஜய்யின் அதிர்ஷ்டம் என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது. இது நீண்டகால திட்டமிடலின் விளைவாகவே தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு மாற்று அரசியலுக்கான தேடல் இளைஞர்களிடமும், முதல்முறை வாக்காளர்களிடமும் இருந்து வந்தது. ரஜினி அரசியலுக்கு வராதது, விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட இடைவெளி ஆகியவற்றை விஜய் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்லலாம்.
அவரது ரசிகர் மன்றங்கள் பல ஆண்டுகளாகவே மக்கள் இயக்கமாக செயல்பட்டு வந்தது அவருக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. எனவே, இது எதிர்பாராத ஒரு விபத்து அல்ல; மாறாக, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு.
புதிய கட்சி - புதிய சாதனை
ஒரு புதிய கட்சியைத் தொடங்கி, எந்த ஒரு பெரிய கூட்டணியும் இல்லாமல், திமுக, அதிமுக போன்ற மாபெரும் அரசியல் இயந்திரங்களை எதிர்த்து வாக்கு எண்ணிக்கையில் கணிசமான இடத்தைப் பிடிப்பது என்பது சாதாரணமான காரியம் கிடையாது.
என்.டி.ஆரின் 46 சதவீத வாக்குகளை நெருங்குவது கடினம் என்றாலும், விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான் போன்றவர்கள் தங்களது முதல் தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட விஜய் பல மடங்கு உயர்ந்து நிற்கிறார். இது ஒரு கட்சியின் தொடக்க நிலைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.
என்டி ராமராவ் சாதனை
விஜய்யின் அரசியல் பயணம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்குமா என்பது அவர் சட்டமன்றத்திற்குள் எப்படிச் செயல்படுகிறார் என்பதிலேயே அடங்கியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் என்.டி.ஆர் போன்றவர்கள் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.
அதேபோல், விஜய் வெறும் தேர்தலோடு நின்றுவிடாமல், மக்கள் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நிற்க வேண்டும். இப்போதைய முடிவுகள் அவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளன. ஆனால், தமிழகத்தின் திராவிட அரசியல் கட்டமைப்பை உடைத்து நீண்ட காலம் நீடிக்க வேண்டுமானால், வலுவான இரண்டாம் கட்ட தலைவர்களையும், தெளிவான கொள்கை விளக்கங்களையும் அவர் உருவாக்க வேண்டியது அவசியம்.
தமிழக மக்கள் விஜய்க்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். இந்த வாய்ப்பு ஒரு மாற்றத்திற்கான ஆரம்பமா அல்லது தற்காலிகமான அலையா என்பதை விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கும்...!!












Click it and Unblock the Notifications