எடப்பாடியை பார்ப்பீர்களா? என் கொள்கை உயர்வானது - பாதை தெளிவானது.. செங்கோட்டையன் பதிலால் குழப்பம்
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ‛‛தனது கொள்கை உயர்வானது.. பாதை தெளிவானது'' என்று பதிலளித்து சென்றார். எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் இருக்கிறார். முன்னாள் அமைச்சரான இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.

இந்நிலையில் தான் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி வெளிப்படையாக இருதலைவர்களும் பதிலளிக்கவில்லை. ஆனால் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதாவது கடந்த மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விவாதங்கள் கிளம்பிய நிலையில் இன்று திடீரென்று சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தான் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள். அவரிடம் கேட்டால்தானே காரணம் தெரியும். என்னை சந்திக்காதது ஏன் என்று அவரிடமே கேளுங்கள்'' என்றார்.
இந்நிலையில் தான் இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தது பற்றி செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி செங்கோட்டையன் கூறுகையில், ‛‛கோபி தொகுதியில் கொடிவேரி அணை உள்ளது. இந்த அணையில் ஒரு நாளைக்கு 3 லட்சம் தண்ணீர் எடுக்கும் தொழிற்சாலை அமைய உள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நேற்று விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் அளிப்பதற்காக தான் சபாநாயகரை சந்தித்தேன். அப்போது கூட அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் இருந்தனர்'' என்றார்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, செங்கோட்டையன், ‛‛அவருக்கும் (எடப்பாடிக்கும்), எனக்கும் எவ்வித முரண்பாடும் கிடையாது. தனது கொள்கை உயர்வானது. பாதை தெளிவானது'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் எப்போது எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பீர்கள்? என்ற கேள்விக்கு நேரடியாக செங்கோட்டையன் எந்த பதிலையும் கொடுக்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி - செங்கோட்டையன் இடையே அதிருப்தி என்பது உள்ளதா? செங்கோட்டையன் தனியாக செயல்பட விரும்புகிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications