பொங்கல் வேற வருது.. மக்களெல்லாம் பாவம்ங்க! சீக்கிரம் பேசி ஒரு முடிவு எடுங்க! பஸ் எப்போது ஓடும்?
சென்னை: பொங்கல் நெருங்கும் சூழலில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை இன்னும் இழுத்தடிக்காமல் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் கடந்த 13 மாதமாக அரசு போக்குவரத்து கழங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெறும் எவ்வித பணப் பலனும் வழங்கப்படவில்லை. மேலும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் 16 தொழிற்சங்கங்கள் கூட்டாக சேர்ந்து வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின. அவர்களுடன் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை.
இதனால் நாளை முதல் (9-ந்தேதி) திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதனால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் சூழல் உள்ளது. இந்த நிலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாவர்.
எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். அவர்களுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு உரிய வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications