சென்னையில் மாம்பழம் விற்ற பாட்டியிடம் ரூ. 500 போலி பணம் கொடுத்து ஏமாற்றிய பெண்
சென்னை: ஏழைய எளிய மக்கள் பலர் சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் பழங்கள் விற்பது, பூக்கடை வைப்பது, காய்கறிகள் விற்பது போன்ற பணிகளை செய்கிறார்கள். குறிப்பாக வயதான பெண்கள்,மூதாட்டிகள் பலர் சாலைகளில் பழங்கள் விற்று, காய்கறிகளை விற்று அன்றாட வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். ஆனால் அவர்களிடமே சிலர் பேரம் பேசுவது, ஏமாற்றுவது போன்ற செயல்களை செய்கிறார்கள். அப்படித்தான் மாம்பழம் விற்ற மூதாட்டியிடம் 500 ரூபாய் போலி பணம் கொடுத்து இளம் பெண் ஒருவர் ஏமாற்றி உள்ளார். அந்த மூதாட்டி கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சீசனுக்கு தகுந்தாற்போல பழங்கள் விற்று வருகிறார். இவருக்கு துணையாக இருந்த கணவர் இறந்துவிட்டார். இப்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டி பழங்களை விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே மருத்துவ செலவையும், வாழ்வாதாரத்தையும் கவனித்து வருகிறார்.
தற்போது மாம்பழ சீசன் என்பதால் ஜெயலட்சுமி மாம்பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் பெண் ஒருவர் ஜெயலட்சுமியிடம் ரூ.150-க்கு மாம்பழங்களை வாங்கிக்கொண்டு சிறுவர்கள் விளையாடும் போலி 500 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, மீதி பணத்தையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து அந்த ரூபாய் நோட்டை எடுத்துப் பார்த்த ஜெயலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதனைச் சரிபார்த்தபோது, அது உண்மையான பணமல்ல, வெறும் காகிதம் என்பது தெரிந்தது. பணம் பறிபோனதை நினைத்து மூதாட்டி கண்ணீர் விட்டு அழுதது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்தது. ஜெயலட்சுமி போலி நோட்டைக் காட்டி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து தனியார் செய்தி ஊடகங்கள் நேற்று அடுத்தடுத்து செய்தி வெளியிட்டன.இதுபற்றி கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், "மனிதாபிமானம் எங்கே போனது? மாம்பழம் விற்று பிழைப்பு நடத்தும் ஒரு வயதான மூதாட்டியிடம், விளையாடப் பயன்படுத்தும் போலியான 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய அந்தப் பெண்ணின் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது.
கஷ்டப்பட்டு உழைக்கும் அந்தத் தாய் தான் ஏமாந்ததை நினைத்துக் கண்ணீர் விடுவது நெஞ்சை உலுக்குகிறது. நான் அங்கு இருந்திருந்தால், அவரை இப்படி அழ விட்டு வீடியோ எடுத்திருக்க மாட்டேன். உடனடியாக அவர் கையில் 1000 ரூபாயைக் கொடுத்து, அவரது உழைப்பிற்கு மதிப்பளித்து ஆறுதல் படுத்தி இருப்பேன். வீடியோ எடுப்பதற்காக மற்றவர் கண்ணீரை வேடிக்கை பார்க்காதீர்கள். அந்த இடத்தில் உதவி செய்வதே உண்மையான மனிதநேயம்." என்று கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "காகிதத் தாளை கொடுத்து ஏமாற்றிய அந்த மனம் படைத்தவர் மனிதரே அல்ல. அந்தப் பாட்டியின் கண்ணீர் வெறும் வலியல்ல இந்தச் சமூகம் அவர் மேல் வைத்த நம்பிக்கையின் வீழ்ச்சி பணத்தை இழந்தாலும் உழைப்பால் மீண்டு வருவார் இந்தத் தாய்.. ஆனால் ஏமாற்றியவரின் மனிதாபிமானம் எங்கே போனது?" என்று கேட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications