ஜெயலலிதா செத்துட்டாங்களே.. என் சொத்தை எதுக்காக முடக்கனும்! கோர்ட்டுக்கு போன கம்சலா.. பரபர புகார்!
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தனது சொத்தையும் முடக்கி இருப்பதாகவும், அந்த உத்தரவை நீக்க வேண்டும் என காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 68 வயதான மூதாட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த 1991-96ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதனை அடுத்து, இந்த வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட சொத்துகளை பத்திர பதிவு செய்யக் கூடாது என, வாலாஜா பாத் சார் பதிவாளருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கடந்த 2021 பிப்ரவரி 27ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்தச் சூழ்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பாத் வட்டம், ஊத்துக்காடு கிராமத்தில் தனக்கு சொந்தமான 2.15 ஏக்கர் நிலத்துக்கு வில்லங்கச் சான்றிதழ் வழங்கக் கோரி 68 வயது மூதாட்டி கம்சலா விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தனது சொத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததாக கூறி, கம்சலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட நிலத்தை பொது ஏலத்தில் வாங்கியதாகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கும், தனது சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை, மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியோருக்கு புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை என்று மனுவில் கூறியுள்ளார். அதனால் சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும். இந்த சொத்து தொடர்பாக பத்திரப்பதிவு எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, மனுதாரரின் கோரிக்கை குறித்து ஆவணங்களை சரி பார்த்து, பதில் அளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications