அதிகாலையிலேயே ஷாக்.. சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் கிடந்த பெண் சடலம்.. ஒருவர் கைது!
சென்னை: சென்னையில் மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த துரைப்பாக்கம் பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் சூட்கேசில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் மாதவரம் பகுதியை சேர்ந்த தீபா என்பது தெரியவந்துள்ளது. சூட்கேஸ் மீட்கப்பட்ட இடத்தின் அருகே வசித்து வரும் மணி என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் ஒ.எம்.ஆர் சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ளன. சென்னையின் ஐடி காரிடர் என்று சொல்லும் அளவுக்கு இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. வேளச்சேரி முதல் சோழிங்கநல்லூர் வரை உள்ள பகுதிகளில் இருக்கும் இந்த ஐடி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் அங்குள்ள விடுதிகளிலும் வீடுகளிலும் தங்கி ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இதனால் எப்போதுமே அந்த பகுதி பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் ஒன்றில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். குறிப்பாக சூட்கேசில் அதிக அளவில் ரத்தக்கறை இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தனர்.
இதில், பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. பெண்ணின் உடலை மீட்ட போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? கொல்லப்பட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.
இதில் அந்த பெண் மாதவரம் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் என்பதும், அவரது பெயர் தீபா என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தீபா காணாமல் போயிருந்தார். எனவே கொலை செய்யப்பட்டிருப்பது தீபா தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், சூட்கேஸ் மீட்கப்பட்ட இடம் அருகே வசித்து வரும் மணி என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளன்னர்.
இந்தக் கொலை எங்கு நடந்தது.. வேறு ஏதேனும் இடத்தில் கொலை செய்து உடலை கொலையாளிகள் இங்கு கொண்டு வந்து போட்டனரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள். குறிப்பிட்ட அந்த இடத்தில் சூட்கேசுடன் யாரேனும் சென்றார்களா? என சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
தடயவியல் நிபுணர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சென்னையின் மிக முக்கியமான இடமான துரைப்பாக்கத்தில் பெண்ணின் சடலம் சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications