Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆறுமுகநேரி தந்த புதுமைப் பெண் கிருஷ்ணா ராதா... திக்கற்று தவிக்கும் பெண்களின் திசைக்காட்டி..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்தின் தலைவியாக உள்ள கிருஷ்ணா ராதா, இதுவரை ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கைக்கு புத்தொளி கொடுத்திருக்கிறார்.

தென் தமிழகத்தின் சிறிய ஊரில் இருந்து புறப்பட்ட இவர் திக்கற்று தவிக்கும் பெண்களுக்கு திசைகாட்டியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

இதனிடையே தனது தொழில்முனைவோர் பயணம் குறித்து ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டதன் விவரம் பின்வருமாறு;

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம்

''தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி தான் எனக்கு சொந்த ஊர். பிறந்தது, படித்தது, திருமணம் முடித்து கொடுக்கப்பட்டது எல்லாமே ஆறுமுகநேரி தான். திருமணம் முடித்துக் கொடுக்கப்படும் வரை வருடத்திற்கு இரண்டு முறை தான் வீட்டை விட்டே வெளியே செல்ல முடியும். காரணம் அந்தளவுக்கு அந்தக் காலத்தில் கடும் கட்டுப்பாடுகள் எங்கள் ஊரில் இருந்தன. பெண் பிள்ளைகளை அதுவும் பெரிய மனுஷியாகிவிட்டால் வெளியே விடமாட்டார்கள்.''

உயர் அதிகாரி

உயர் அதிகாரி

''எனது கணவருக்கு சொந்த ஊர் ஆறுமுகநேரியாக இருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் அவர் பார்த்து வந்த பணி காரணமாக பல மாநிலங்களுக்கும் குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் ராஜஸ்தான், ஜார்கண்ட், குஜராத், கர்நாடகா, என பல மாநிலங்களிலும் குடியிருந்துள்ளோம். அங்கெல்லாம் ஏழை பெண்களுக்கு தொழில் தொடங்க வழிகாட்டுதல் இல்லாமல் அவர்கள் படும் சிரமங்களை கண்கூடாக கண்டிருக்கிறேன்.''

சென்னைக்கு வருகை

சென்னைக்கு வருகை

''கணவர் பணி காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்ந்து வந்த நாங்கள் சில வெளிநாடுகளுக்கும் மாறுதலாகி சென்றிருக்கிறோம். பின்னர் எனது மகன்களின் உயர்கல்விக்காக 2008-ம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தோம். அப்போது தான் தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற எனது நீண்ட நாள் லட்சியத்திற்கு செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினேன். இதற்கு எனது கணவர் உறுதுணையாக இருந்து நான் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தேவையான உதவிகளை செய்தார்.''

8 பேருடன்

8 பேருடன்

''கடந்த 2008-ம் ஆண்டு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் என்ற பெயரில் அமைப்பை தொடங்கிய போது அதில் 8 பேர் மட்டுமே இருந்தோம். இன்று 12 ஆண்டுகளை கடந்து 13-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இதுவரை இந்தச் சங்கம் மூலம் 37,000 பெண்கள் மாநிலம் முழுவதும் பயன் அடைந்து சொந்தமாக தொழில்புரிந்து சாதனை படைத்து வருகின்றனர். அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப பாக்குமட்டை தயாரிப்பது, கறவை மாடுகள் மூலம் பால் வியாபாரம் செய்வது, சிறு குறு தொழில்களை தொடங்குவது என பலரும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.''

அம்மா உதவுவார்

அம்மா உதவுவார்

''விதவைகள், குடிகார கணவன்களால் துயரத்திற்கு உள்ளாகும் பெண்கள், கைத்தொழில் கற்க விரும்பும் பெண்கள், படித்துவிட்டு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என நினைக்கும் பட்டதாரி பெண்கள், கிராமப்பெண்கள் என பலதரப்பட்டோருக்கும் வருவாய் நோக்கமின்றி உதவி வருகிறோம். எங்கள் ஆறுமுகநேரி வீட்டில் எத்தனையோ பெண்கள் எனது அம்மாவிடம் உதவி கேட்டு வருவார்கள், அம்மா அவர்களிடத்தில் அன்போடு நடந்துகொள்வதோடு அவர்களின் குழந்தைகளுக்கான உணவையும் கொடுத்து அனுப்புவார். எங்கள் வீட்டு திண்ணையில் ஆறுதல் தேடி வந்தவர்கள் ஏராளம். எனது அம்மாவின் அந்த குணம் தான் இன்று மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதலை கொடுத்துள்ளது.''

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி

''தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு எவ்வித பினையுமின்றி உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்குவதற்காக ரூ.1 கோடி வரை கடனுதவி தருவதாக இந்தியன் வங்கி சேர்மன் பத்மஜா சந்துரு அண்மையில் எங்களிடம் தெரிவித்துள்ளார். இதைவிட எங்கள் செயல்பாட்டுக்கு வேறு என்ன அங்கீகாரம் வேண்டும். இந்தியன் வங்கியுடன் மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதன் அடிப்படையில் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை அவர் தெரிவித்துள்ளார்.''

முன்னேற்றம்

முன்னேற்றம்

''பெண்கள் யாரையும் எதற்கும் சார்ந்திருக்காமல் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் சங்கத்தின் நிலைப்பாடு. தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும் திறமையும் இருந்தால் போதும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை எங்கள் சங்கமே செய்யும். மானியம், கடனுதவி, திட்ட மதிப்பீடு, மார்க்கெட்டிங் என எதைப்பற்றியும் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.''

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

''எனது கணவர் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வைஸ் பிரசிடெண்ட் ஆக இப்போது உள்ளார். மூத்த மகன் எம்.பி.ஏ. முடித்திருக்கிறார், இளையமகன் டாக்டருக்கு படித்து முடித்திருக்கிறார். இதற்காக நான் வீட்டில் இருந்தால் போதும் என நினைக்கவில்லை. நானும் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறேன். பியரிங் உள்ளிட்ட ஆட்டோமொபல் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ராணிப்பேட்டையில் நடத்தி வருகிறேன்''.

பயனுள்ள வாழ்க்கை

பயனுள்ள வாழ்க்கை

''நமது வாழ்க்கை பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை தட்டிக்கழிக்காமல் நான்கு பேருக்கு செய்தோமானால் அது அவர்களின் வாழ்க்கையை வசந்தமாக்கும். இப்போதும் கூட டாக்டருக்கு படித்துள்ள எனது இளைய மகனிடம் நான் கூறுவது என்னவென்றால், ஏழை எளியோருக்கு, வசதி வாய்ப்பற்றவர்களுக்கு இலவச சேவை செய்ய வேண்டும் என்பது தான். நிச்சயம் இதை அவர் செய்வார் என நம்புகிறேன்'' என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார் பெண் தொழில்முனைவோர் கிருஷ்ணா ராதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+