இந்தாங்க 2 பவுன் தங்க செயின்.. ஏழ்மையிலும் பெண் நிவாரணம்.. "பொன்மகளே" என நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கொரோனா நிவாரண நிதிக்காக பெண் ஒருவர் 2 பவுன் தங்க சங்கிலியை கொடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ந்து போய் அந்த பெண்ணை பாராட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். முக்கியமாக சிறுவர்கள், பெண்கள் பலர் தங்களின் தேவைக்காக சேர்த்து வைத்து இருந்த பணங்களை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்கள்.
இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!
கொரோனாவை தடுக்க தமிழ்நாடு அரசோடு மக்களும் கரம் சேர்த்து உதவும் இந்த நிகழ்வு பெரிய அளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மேட்டூரில் சௌமியா என்ற பெண் கொடுத்த நிவாரண நிதியும் இதேபோல் பாராட்டுகளை பெற்றுள்ளது.
நிதி
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று மேட்டூர் அணையை திறப்பதற்காக சென்று இருந்தார். அப்போது மக்களை சந்தித்த ஸ்டாலின், அவர்களிடம் மனுக்களை பெற்றார். இந்த மனுவோடு சௌமியா என்று பெண் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளார். இந்த கடிதத்தில் கொரோனா நிவாரண நிதிக்காக தனது 2 பவுன் தங்க சங்கிலியை நிவாரணமாக கொடுத்துள்ளார்.
சங்கிலி
இந்த கடிதத்தில் அந்த பெண், நான் ஒரு கம்ப்யூட்டர் சைன்ஸ் பிஇ பட்டதாரி, என்ன அப்பா ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர். என்னுடைய 2 அக்கா மற்றும் என்னையும் அவர்தான் படிக்க வைத்தார். அக்கா 2 பேரின் திருமணத்திற்காக என் அப்பா செலவு செய்தார். அதன்பின் என் அம்மாவின் நிமோனியா காய்ச்சலால் மருத்துவ சிகிச்சைக்காக அப்பாவின் சேமிப்பு பணம் எல்லாம் செலவாகிவிட்டது.
செலவு
அம்மாவும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதற்கு செலவே 13 லட்சம் ஆகிவிட்டது. எங்களிடம் சொந்த வீடு இல்லாததால் 7 ஆயிரம் ரூபாய் பென்சன் பணத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களிடம் குடும்பத்தை நடத்த பணம் இல்லை. எனக்கு ஏதாவது வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும். எனக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்தால் நன்றியோடு இருப்பேன்.
நன்றி
எனக்கு அரசுவேலைதான் வேண்டும் என்று இல்லை, எங்கள் ஊருக்கு அருகிலேயே தனியாரில் வேலை வாங்கி கொடுத்தாலும் நன்றியோடு இருப்பேன். என்னிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை, அதனால் என்னிடம் இருக்கும் 2 பவுன் தங்க சங்கிலியை வைத்து உள்ளேன், நன்றி, என்று அந்த பெண் முதல்வரிடம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு தன்னுடைய தங்க சங்கிலியையும் இணைத்துள்ளார்.
தங்கம்
டிவிட்டரில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ந்து போய் அந்த பெண்ணை பாராட்டி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது ட்வீட்டில், மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.