குரோம்பேட்டையில் பஸ் டயர் ஏறியதில் பெண் உயிரிழப்பு.. கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சோகம்
சென்னை: குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் கணவனுடன் சென்று கொண்டிருந்த மனைவி நிலை தடுமாறி கீழே விழுந்ததில், அரசு பேருந்தின் பின் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷயா பாத்திமா (வயது 30). இவருடைய கணவர் அப்துல் அஜித்.
இவர்கள் இருவரும் நேற்றிரவு குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவிட்டு தங்கள் 2 சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் மோதியதில், அக்ஷயா பாத்திமா நிலைதடுமாறி 2 சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கோயம்பேட்டிலிருந்து பெரம்பலூர் சென்ற அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அக்ஷயா பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் அப்துல் அஜித் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அங்கே இருந்தவர்கள் உடனடியாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த அக்ஷயா பாத்திமாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய அப்துல் அஜித் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவன் கண் முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.