'மதசார்பின்மை' வார்த்தை அரசியல் சாசனத்தில் இல்லை.. 25 ஆண்டுகளுக்கு பிறகுதான்! ஆளுநர் ரவி பரபர பேச்சு
சென்னை: சுதந்திரம் அடைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் மதச்சார்பின்மை என்ற வார்த்தை இந்திய நாட்டில் சொருகப்பட்டது எனவும் சிலரை திருப்திப்படுத்தவே மதச்சார்பின்மை சேர்க்கப்படது எனவும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார்.
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர் என் ரவி கூறும் கருத்துக்கள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது. தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநர் ரவி, ஆளும் திமுகவை சீண்டும் விதமாக அடிக்கடி கருத்துக்களை கூறி வருகிறார். அண்மையில் கூட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி, சனாதனத்தை டெங்குவுடன் ஒப்பிட்டு பேசியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டார்கள் என்று பேசினார்.

அமைச்சர் உதயநிதியை பேசியதை மறைமுகமாக குறிப்பிட்டு ஆளுநர் ரவி இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,மதசார்பின்மை என்ற வார்த்தை இந்திய நாட்டில் சொருகப்பட்டது என்று கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி மலையில் அமைந்துள்ள ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் 41வது சமய வகுப்பு மாநாடு மற்றும் 35வது பட்டமளிப்பு விழா திருவட்டாரில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி இவ்வாறு கூறியுள்ளார். ஆளுநர் ரவி மேலும் கூறியதாவது:- சனாதன தர்மத்தை பலவீனபடுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. பல கடவுள்களை வழிபடுகிறோம். ஆனால், அதை வைத்து சிலர் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். வேறு எந்த மதமும் சொல்ல முடியாத, அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கிறார் என்ற கருத்தை நாம் கூறுகிறோம். சனாதன தர்மத்தை பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும்.
அனைவருக்கும் விளக்கம் கூறும் அளவிற்கு தயராக இருப்பது அவசியம். குறிப்பாக இளைய சமுதாயத்தினர் இது பற்றி விளக்கம் அளிக்க தயராக இருப்பது அவசியம். சுதந்திரத்தின்போது பொருளாதாரத்தில் உலக அளவில் 6-வது இடத்தில் நமது நாடு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் சனாதான ஆட்சியில் பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம்.
இன்னும் சிறிது காலத்தில் மூன்றாவது இடத்துக்கு வர இருக்கிறோம். ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு பல ஏமாற்று வேலைகள் இங்கு நடந்தன. தவறான கோட்பாடுகள் நமக்கு சொல்லப்பட்டன. அதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், மதசார்பின்மை ஆகும்.. மதசார்பின்மை என்ற வார்த்தை அரசியல் சாசனத்தில் இடம்பெறவே இல்லை. ஆனால், சுதந்திரம் அடைந்து 25 ஆண்டுகளுக்கு கழித்துதான், மதச்சார்பின்மை என்ற வார்த்தை இந்திய நாட்டில் சொருகப்பட்டது.
மதச்சார்பின்மை என்பது நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்மமாக இருக்கவேண்டும். புதிதாக வந்த சிலர் நான் சொல்வது மட்டும் தான் சரி, நான் வணங்குவது மட்டும்தான் கடவுள் என்று சொல்கிறார்கள். அதைத்தான் மதசார்பின்மை என அவர்கள் சொல்கிறார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications