World Briyani day: தலப்பா கட்டி,வேணு, பொன்ராம், முஜிப், கோல்டு ஸ்டார்..திண்டுக்கல் பிரியாணி அனுபவம்!
சென்னை: உலக பிரியாணி தினம்... அதுவும் ஞாயிற்றுக்கிழமை நாளில்.. பிரியாணி உணவுகளின் தலைநகரம் போல தனித்துவமாக இருக்கும் திண்டுக்கல் பிரியாணி கடைகளில் ஆஃபர்களும் கூட களைகட்டி இருக்கின்றன.
உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் முஜிப் பிரியாணி கடையில் 5 நபர்கள் சாப்பிடக் கூடிய 1/2 படி சிக்கன் பிரியாணி ரூ499 மட்டும்.. என்பது நேற்று முதல் வலம் வரும் விளம்பரம்!

திண்டுக்கல் மாநகரம் என்பது பல நூறு குக்கிராம மக்களின் ஒன்றுகூடல் இடம். என்னதான் கோவிலூரிலும் எரியோட்டிலும் வேடசந்தூரிலும் வடமதுரையிலும் அய்யலூரிலும் துணி கடை, நகை கடை, ஹோட்டல்கள் இருந்தாலும் திண்டுக்கல் டவுனுக்கு வந்து துணி எடுப்பதும் பாத்திரம் எடுப்பதும் அப்படியே பிரியாணியை ஒரு பிடி பிடித்துவிட்டுப் போவதும் தொட்டு தொடரும் பாரம்பரியாகவே இருந்து வருகிறது.

திண்டுக்கல் மாநகரத்தைப் பொறுத்தவரையில் பெருமாள் நாயுடு பிரியாணி கடை மிகவும் பழமையானதாக கூறப்படுகிறது. 170 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பெருமாள் நாயுடு பிரியாணி, மதுரை சாலையில் பேகம்பூரில் உள்ளது. அதிகாலையிலேயே சூடான சுவையான பிரியாணி இங்கு கிடைக்கும் என்பது இதன் ஸ்பெஷல். காலை 7 மணிக்கு சூடான மட்டன் பிரியாணி, இட்லி, மட்டன் சாப்ஸ் என களைகட்டும் பெருமாள் பிரியாணி கடை காலை 7 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை செயல்படும்.

பெருமாள் நாயுடு மூலவர் என்றால் திண்டுக்கல் பிரியாணியை உலகறிய செய்தவர்கள் தலப்பாகட்டி, பொன்ராம் போன்றவர்கள். திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலுக்கு தெற்கே ஆனந்த விலாஸ் ஹோட்டல் என்ற பெயரில் 4 அல்லது 6 பேர் மட்டுமே அமர்ந்து வியர்க்க வியர்க்க கால் பிளேட், இன்னொரு கால்பிளேட், மட்டன் சுக்கா, மூளை என கடைவீதிக்கு வந்த கூட்டம் அலாதி பிரியத்துடன் சாப்பிட்டுவிட்டு சென்ற இடம்... இன்று அந்த கட்டிடம் இல்லை.. இடிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக நாடுகள் முழுவதும் அதன் கிளைகள் பரவிக் கிடக்கிறது.. அதுதான் இன்றைய திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி ஹோட்டல்.

இதேபோல பொன்ராம்.. திண்டுக்கல் பேகம்பூரில் மாலை நேரத்தில் திறந்த வெளியில் அமர்ந்து சூடாக 4 இட்லி, மட்டன் குழம்பு, ஈரல் பிரை என நாக்கை சுழற்றி சுழற்றி சாப்பிட்ட கடையின் பெயர் பொன்ராம்.. அப்பாவுடன் போன அந்த பொன்ராம் கடையின் மட்டன் குழம்பு வாசம் மறக்கவா முடியும்? இன்று திண்டுக்கல்லில் மூளை முடுக்கெல்லாம் பொன்ராம் பிரியாணி கடையின் நவீனங்களைப் பார்க்கலாம்..
இந்த வரிசையில் திண்டுக்கல் சுற்றுவட்டார மக்களை கட்டிப் போட்ட பிரியாணி கடைகள்தான் பங்காரு பிரியாணி, துளசி பிரியாணி, வேணு பிரியாணி. வேணு பிரியாணி கடை பக்கம் எட்டிப்பார்த்தால் அப்படி ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் திண்டுக்கல் பிரியாணி பிரியர்களுக்கு மட்டுமே தெரியும்.. வேணு பிரியாணி அருகே சில கட்டிடங்கள் தள்ளி இருக்கும் சிவா பிரியாணியின் சுவை.
இந்த பட்டியலில் ஆச்சீஸ், கோழிநாடார், கோல்டு ஸ்டார், ஜேபி, முஜிப் பிரியாணி .. கொடிகட்டி பறக்கின்றன! (இந்த லிஸ்டில் சிலவை விட்டுப் போயிருந்தாலும் கோவிக்கப்படாது).

திண்டுக்கல் பிரியாணியின் அடிப்படையே சீரக சம்பா அரிசியை பயன்படுத்துவதுதான். சீரக சம்பா பிரியாணி, திண்டுக்கல் மண்ணுக்கே உரித்தான எலும்பு தால்சா, மட்டன் கோலா உருண்டை, தயிர் பச்சடி இவைகளுடன் கடைசியாக பீரிணி எனும் பாயசவகை இனிப்பு. ஜென்மம் நிறைந்தாலும் திண்டுக்கல் பிரியாணியின் சுவையை மறக்க முடியாது.
சூடான திண்டுக்கல் பிரியாணியை இலையில் கொட்டிய உடன் லைட்டா ஒரு பிடி எடுத்து உங்கள் நாசிகளை சுதந்திரமாக உலவ விடுங்கள்.. சுவையின் உச்சம் உணருவீர் என்பதுதால் திண்டுக்கன்பிரியாணி பிரியரான நமது அனுபவம்!












Click it and Unblock the Notifications