அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! பரபரப்பை கிளப்பிய காயத்ரி ரகுராம்! விலகலை மறக்க முடியுமா?
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வார் ரூம் அரசியலை காயத்ரி ரகுராம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சம்பவம் இந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளாக இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பெண்களுக்கு எதிராக பாஜகவில் பல பிரச்சினைகள் நடப்பதாக ட்விட்டரில் பதிவுகளை போட்டிருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவுக்கும் டெய்சி சரணுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

டெய்சியை திருச்சி சூர்யா சிவா தவறான வார்த்தைகளை கேட்டதும் பாஜக மூத்த தலைவர் ஒருவருடன் டெய்சியை தொடர்புபடுத்தி பேசியதும் பதிலுக்கு திருச்சி சூர்யாவின் குடும்பத்தினரை டெய்சி மிக மோசமாக பேசியதும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் இதை எதிர்த்து காயத்ரி ரகுராம் குரல் கொடுத்தார். இதனிடையே கடந்த ஆண்டு நடந்த காசி தமிழ் சங்கமத்திற்கு பாஜகவின் தமிழ் பிரிவு பொறுப்பில் இருந்த தன்னை அண்ணாமலை அழைத்து செல்லவில்லை என வெளிப்படையாக ஆதங்கத்தை காயத்ரி வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் திருச்சி சூர்யா சிவாவை கண்டித்து காயத்ரி போட்ட ட்வீட்டும் பிரச்சினையாக வெடித்தது. அதாவது சொந்த கட்சிக்காரரையே விமர்சிக்கிறார் என காயத்ரி மீது அதிருப்தி ஏற்பட்டது.
இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுகிறார் என காயத்ரியை கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்குவதாக அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் துபாயில் திமுக பிரமுகர் ஒருவரை தான் சந்தித்ததாகவும் அதை கொச்சைப்படுத்தி அண்ணாமலை பேசியதாகவும் காயத்ரி பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார்.
ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த அந்த பிரபலத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதை இப்படித்தான் கொச்சைப்படுத்துவதா, என்னை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் வார் ரூம் மூலம் என்னை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என கூறி வார் ரூம் அரசியல் விவகாரத்தை வெளியே கொண்டு வந்தார். அண்ணாமலையின் கீழ் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் விலகினார்.
காயத்ரி மீதான குற்றச்சாட்டு குறித்து யாரும் விசாரிக்கவில்லை என்றும் காயத்ரி குற்றம்சாட்டினார். மேலும் அண்ணாமலை மட்டும்தான் டெல்லி தலைமையுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பார், மற்றவர்கள் யார் இருந்தாலும் எப்படியாவது அவர்கள் மீது அவதூறை கிளப்பி விடுகிறார் என்றும் காயத்ரி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஜனவரி மாதம் காயத்ரி பாஜகவிலிருந்து விலகிய நிலையில் கிட்டதட்ட 11 மாதங்களாக அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா சிவா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications