"புண்ணியவான் அன்பு".. முரட்டு தோற்றம்.. மனசு சொக்க தங்கம்.. மறைந்துபோன ஜெ.அன்பழகன்.. இரக்கமற்ற 2020
மறக்க முடியாத திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன்
சென்னை: இந்த கொரோனா எவ்வளவு கொடியது.. எத்தனை மென்மை மனம் கொண்டவர்களையும் ஈவிரக்கமில்லாமல் கொண்டு போய்விடுகிறது.. அப்படித்தான் இந்த வருடம், தங்கள் கட்சியின் மிக முக்கிய தூணான ஜெ.அன்பழகனை திமுக இழந்துள்ளது!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.. ஆனால் எம்எல்ஏக்களைவிடவும் படுஃபேமஸ்.. பாரம்பரியமான கழக ரத்தம் பாயும் உடன்பிறப்பு நான் என்று பெருமிதத்துடன் கடைசிவரை சொல்லி கொண்டே இருந்தவர்.. கம்பீரமான, பெருத்த உடலமைப்பு கொண்டவர்.. அதிரடி என்றால் அது அன்பழகன்தான் என்ற பெயரையும் வெகு சீக்கிரத்திலேயே பெற்றவர்.
சட்டமன்றங்களில் அன்பழகன் இருந்தாலே அன்று உச்சக்கட்ட பரபரப்புதான்.. ஏன் சில சமயங்களில் களேபரமும் காத்திருக்கும்.. யாருக்குமே பயப்பட மாட்டார் அன்பழகன்.. தனக்கு மனசில் பட்டத்தை துணிச்சலுடன் எடுத்துசொல்வார்.. அதேசமயம், தன் சந்தேகம் தீரும் வரை கேள்விகளை எழுப்பி கொண்டே இருப்பார்.
"இந்த அவையில் எத்தனையோ உறுப்பினர்கள் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள்... ஆனால் அன்பழகன் பேசும்போதுதான் பிரச்னை ஆகிறது" என்று தமிழக முதல்வர் அடிக்கடி வேதனைப்பட்ட தருணங்களும் உண்டு. திமுக தலைவர் ஸ்டாலினை அன்பழகனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.. அவரது தீவிர ஆதரவாளர்... ஸ்டாலின் மீது உரிமை எடுத்து பேசக்கூடியவர் அன்பழகன்.. ஒருமுறை கூட்டத்தில், ஸ்டாலினை மேடையில் வைத்து கொண்டு அன்பழகன் பேசுகிறார், "நீங்க இப்போ கட்சி தலைவராகிட்டீங்க.. அதனால இனிமேல் நீங்க பேன்ட் அணியக் கூடாது" என்று அன்பு கோரிக்கை வைத்தார்.
திமுக தொண்டர்களின் பல வீட்டு கல்யாணங்கள் அன்பழகன் மறைவாக செய்த உதவிகளால்தான் நடந்துள்ளது.. ஏழை தொண்டர் ஒருவர் தன் வீட்டு கல்யாணம் நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டாலே அங்கு அன்பழகனின் நிதியுதவி தானாக வந்து சேர்ந்துவிடும்.
அடடா.. விடுங்கப்பா என்னை.. "அங்கே என்ன தெரிகிறது".. காட்பாடியை கலக்கிய துரைமுருகன்!
அதேபோல மருத்துவ உதவி என்று யார் வந்தாலும் சிகிச்சைக்கு பணம் தந்து உதவுவதுடன், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கே போன் செய்து உரிய சிகிச்சைக்கு கோரிக்கை விடுப்பார்...இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் உயிருடன் நடமாடுகிறார் என்றால், அது அத்தனையும் அன்பழகன் செய்த புண்ணியத்தால்தான்!
கொரோனா தடுப்பு பணிகளை இந்த அளவுக்கு இழுத்து போட்டு கொண்டு செய்யவும், திடீரென படுத்துவிட்டார்.. ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் இருந்தவர், ஆபரேஷன் ஆனவர்.. அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று டாக்டர்கள் சொன்னபோதே அதிர்ந்துபோய்விட்டார் ஸ்டாலின்!
அன்பழகன் சிகிச்சையில் இருந்தபோதெல்லாம், "நான் ஏற்கெனவே அன்புகிட்ட சொன்னேன்.. உடம்பை பார்த்துக்கோன்னு.. கவனிக்கவே இல்லை.. எப்படியாவது என் அன்புவை மீட்டு கொண்டு வந்துவிடுங்கள்.. என் ரொம்ப நாள் ஃபிரண்ட்" என்று டாக்டர்களிடம் சொல்லி கொண்டே இருந்தார் ஸ்டாலின்.
தமிழக முதல்வரும் அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார்.. தமிழிசை சவுந்தராஜனோ ஹைதராபாத்தில் இருந்து மருந்து அனுப்பினார்.. இப்படி கட்சிகளையும் தாண்டி அனைவரையும் ஈர்த்தவர் ஜெ.அன்பழகன்.. கண்ணெதிரே சிரித்தபடியே சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருந்தவர் திடீரென ஒருநாள் நம்மை விட்டு மறைந்துவிட்டார்.. இந்த வருடம் அன்பழகனின் மரணம் மொத்த பேரையும் உலுக்கி போட்டது என்றே சொல்ல வேண்டும்!