பார்வை நன்றாக தெரிகிறது.. கனிமொழிக்கு நன்றி சொன்ன சிறுமி ரேவதி.. திமுக எம்பி சொன்ன அறிவுரை
சென்னை: மஞ்சள் காமாலை நோயால் கண் பார்வை இழந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்த திமுக எம்பி கனிமொழிக்கு அந்த சிறுமி நன்றி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி எம்பி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் வழங்கினார். அந்த வகையில் கடந்த 27ஆம் தேதி திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப்பழங்கரை ஊராட்சியில் கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். அப்போது கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை சந்தித்தார்.
அந்த சிறுமிக்கு என்ன நிகழ்ந்தது என அவருடைய தாயிடம் கேட்டறிந்தார். அந்த சிறுமியின் பெயர் ரேவதி என்றும் 7ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் உனக்கு கண் பார்வை வந்துவிடும் , நீ கவலைப்படாதே என தைரியமூட்டினார் கனிமொழி. அந்த வகையில் நெல்லையில் ஒரு கண் மருத்துவமனையில் சிறுமிக்கு கடந்த 6ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
இதையடுத்து 7ஆம் தேதி சிறுமி வீடு திரும்பிய நிலையில் ஏரல் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று சிறுமியிடம் நலம் விசாரித்தார். அப்போது கனிமொழி எம்பியும் சிறுமியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அந்த சிறுமி, தனக்கு உதவியதற்கு கனிமொழிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தானும் மருத்துவராவேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று (12/01/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியை சிறுமி ரேவதி சந்தித்து நன்றி தெரிவித்தார். கனிமொழி எம்.பி.யின் சொந்த நிதியின் மூலம் கண் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு,தற்போது கண் நன்றாக தெரிகிறது என்று கூறினார். சிறு வயதில் மஞ்சள் காமாலை நோயினால் மாணவி ரேவதிக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. தங்கையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி மாணவி ரேவதிக்கு அறிவுரை கூறினார். மாணவி ரேவதியுடன் அவரது தாயார் மற்றும் தங்கை உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications