பேஸ்புக்கில் அழகான புகைப்படம்.. 15 பெண்களுடன் அந்தரங்க காதல் சாட்டிங்.. மிரட்டிய இளைஞர் கைது
சென்னை: அழகான இளைஞர் ஒருவரின் படத்தை பேஸ்புக் டிபியாக வைத்து 15 பெண்களை காதல் வலையில் விழ வைத்து பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் நிஷாந்த் என்பவர் தன்னை காதலிப்பதாக நாடகமாடி தன்னுடன் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்தார்.
அந்த சாட்டிங்கை வெளியிட்டு விடுவதாக என்னை மிரட்டி பணம், நகை பறித்து வருவதாக தனது புகாரில் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
இளம்பெண் அளித்த செல்போன் எண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த 26 வயதான லோகேஷ் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 முடித்து
விசாரணையில் பிளஸ் 2 முடித்துவிட்டு என்ஜினியரிங் சேர்ந்த இவர் அந்த படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் சும்மா இருந்துள்ளார். பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவே பிளஸ் 2 முடித்த இவருக்கு யார் வேலை தருவார்கள். அதிலும் உடலை வருத்தி கொண்டு செய்யும் வேலையைத்தான் செய்ய வேண்டும் என நினைத்த லோகேஷ் சொகுசாக பணம் சம்பாதிக்க யோசித்தார்.

சம்பாதித்தல்
அப்போது பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி சம்பாதிக்கலாம் என்ற ஐடியா அவரது மூளைக்கு உதித்ததாம். அதன்படி பேஸ்புக்கில் தனது பெயரை நிஷாந்த், விமலேஷ், விமல் போன்ற பெயர்களில் கணக்கை தொடங்கி, அழகான இளைஞர்களின் புகைப்படங்களை வைத்து அது தான்தான் என இளம் பெண்களை நம்ப வைத்தாராம்.

இளம் பெண்களுடன் நட்பு
திருமணமான பெண்கள், இளம் பெண்களுடன் நட்பு கொண்டுள்ளார். பின்னர் அவர்களிடம் போன் நம்பரை வாங்கி வாட்ஸ் ஆப்பில் காதல் ரசம் சொட்ட சொட்ட சாட்டிங் செய்ததாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து மருத்துவச் செலவு, பிறருக்கு உதவுவது போன்ற காரணங்களை கூறி பணத்தை லோகேஷ் பெற்றதாக கூறப்படுகிறது.

வர்ணித்து சாட்டிங்
இவரது நடிப்பை நம்பி பணம் கொடுக்காத பெண்களை அந்தரங்களை வர்ணித்து சாட்டிங் செய்து அவர்களுடன் நன்கு பழகி பின்னர் பணம் கொடுக்காவிட்டால் அந்த உரையாடல்களை பெற்றோருக்கோ அல்லது கணவருக்கோ அனுப்பிவிடுவேன் என மிரட்டி மிரட்டியே நகை, பணம் பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதையும் மருந்து, மாத்திரை என குறிப்பிடச் சொல்லி நகைகளை கொரியர் மூலம் லோகேஷ் அனுப்ப சொல்லி வாங்கியுள்ளார்.

13 சவரன் நகை
இது போல் 15 பெண்களிடம் 13 பவுன் நகைகளையும் லட்சக்கணக்கான பணத்தையும் பறித்துள்ளார். சென்னை, கன்னியாகுமரி, கோவை, திண்டுக்கல், மதுரை, திருச்சி மற்றும் புதுவை என தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பெண்களையும் மலேசியாவில் வசிக்கும் பெண்ணையும் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து லோகேஷை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications