சென்னை ஈசிஆர் சாலையில் விபத்து: கண்முன்னே பலியான காதலி! அடுத்த நொடியே இளைஞர் எடுத்த விபரீத முடிவு
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது அரசு பஸ் மோதி 20 வயது என்ஜினியரிங் பெண் உயிரிழந்தார். உயிருக்கு உயிராக காதலித்த காதலி தன் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்ததை பார்த்து வேதனை தாங்காத காதலன், அதே சாலையில் வந்த மற்றொரு பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சின்ன கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பிஇ இறுதியாண்டு படித்து வந்தவர் யோகேஷ்வரன் (வயது 20). அதே கல்லூரியில் படித்து வரும் மாணவி சபரீனா (20). யோகேஷ்வரனும் சபரீனாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரும் அவ்வப்போது ஒன்றாக பைக்கில் வெளியே செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் விடுமுறை தினமான இன்று இருவரும் வெளியே சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக யோகேஷ்வரன் மாமல்லபுரத்திற்கு காதலி சபரீனாவுடன் வந்திருக்கிறார். மாமல்லபுரத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த இருவரும் பின்னர் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். சென்னை ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் இருவரும் பைக்கில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இதில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் காதலர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் காதலர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். எனினும் யோகேஷ்வரனுக்கு லேசான காயங்கள் தான் ஏற்பட்டது. ஆனால் காதலி சபரீனா அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார். மேலும் அவரது பைக்கும் சுக்குநூறாக நொறுங்கியது.
தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி தன் கண் முன்னே உடல் நசுங்கி பலியானதை பார்த்து காதலன் யோகேஷ்வரன் கதறி அழுதார். நீ இல்லாத உலகத்தில் என்னால் வாழ முடியாது என்று கதறி அழுதார். தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த யோகேஷ்வரன் திடீரென அதே சாலையில் ஒரு 200 மீட்டர் தூரம் ஓடிச்சென்றுள்ளார். அப்போது காதலி சபரீனாவின் செல்போனில் இருந்து அவரது பெற்றோருக்கு போன் செய்துள்ளார். அதில் "நானும், உங்களது மகளும் மாமல்லபுரம் சுற்றுலா வந்திருந்தோம்.
வந்த இடத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது. உங்கள் மகள் இறந்துவிட்டாள்" என்று தகவலை கூறினார். இதையடுத்து அதே சாலையில் புதுவை நோக்கி வந்த அரசு பேருந்து முன்பு பாய்ந்தார். இதில் அந்த பஸ் மோதியதில் யோகேஷ்வரன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விபத்து குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.
முதற்கட்டமாக காதலர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், காதலர்கள் இருவீட்டினருக்கும் தகவல் தெரிவித்தனர். காதலி விபத்தில் இறந்ததும் காதலன் பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications