ஹிந்தி பேசியதும் ஜான் என்னை திரும்பி பார்த்தான்.. வயிற்றில் துணியை கட்டி.. கடத்தல் ரேவதி பகீர்!
குழந்தையை கடத்திய பெண் வாக்குமூலம் தந்துள்ளார்
Recommended Video
சென்னை: "நான் ஹிந்தி பேசியதும் ஜான் என்னை திரும்பி பார்த்தான்.. துணியை சுற்றிக் கொண்டு கர்ப்பிணி போல நடித்தேன்" என்று 7 மாத குழந்தையை கடத்திய பெண் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
வடமாநில தம்பதிகள் ஜான்போஸ்லே - ரந்தீஷா ஆகியோர் மெரினாவில் பலூன் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களது 7 மாத குழந்தை ஜானை, 24 வயது இளம்பெண் ரேவதி என்பவர் கடத்திவிட்டார்.

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டினார்.. தினமும் 100, 200 ரூபாய்க்கு அல்லல்படும் நிலையில், ஒருநாளைக்கு 2 ஆயிரம் தருவதாக சொல்லவும் பெற்றோரும் மண்டையை ஆட்டினர். குழந்தையை இப்படி கடத்தி போன செயல் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், குழந்தையை மீட்க 8 தனிப்படைகளை அமைத்து கமிஷனர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி, போலீசாரும் நர்ஸ் ஜூலியட் உதவியுடன் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.. கடத்திய ரேவதியும், அவரது தாயாரையும் கைது செய்தனர்.. அப்போது ரேவதி போலீசில் சொன்ன வாக்குமூலம் இதுதான்:
எனக்கு கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகிறது.. நர்சிங் படிச்சிட்டு இருந்த எனக்கு பாதியிலேயே படிப்பை நிறுத்தி கல்யாணம் பண்ணிட்டாங்க.. என் கணவர் இளங்கோவன் ஒரு டெய்லர்.. அரக்கோணத்தில் இருக்கிறோம்.. 6 வயசில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆனால் என் கணவனுக்கு ஆண் குழந்தைதான் பிடிக்கும்.. 2 முறை எனக்கு அபார்ஷன் ஆகிவிட்டது.. அதனால் 4வது முறை கர்ப்பம் ஆனேன்.. எப்ப பார்த்தாலும் ஆண் குழந்தைதான் வேணும் என்று என் கணவர் சொல்லி கொண்டே இருந்ததால் நான் பயந்துவிட்டேன்.. அப்பதான் என் அம்மா ஜெயலட்சுமியிடம் விஷயத்தை சொன்னேன்.. கர்ப்பத்தை ரகசியமாக கலைத்துவிட்டு, தொடர்ந்து கர்ப்பிணி போல நடிக்க சொன்னார். மேலும் சென்னையில் ஒரு ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி அதை நம் குழந்தை என்று சொல்லி கணவனை ஏமாற்றலாம் என்றும் ஐடியா தந்தார்.
அதன்படி திரும்பவும் அபார்ஷன் செய்து கொண்டேன்.. துணியை சுற்றிக் கொண்டு கர்ப்பமாக இருப்பதுபோல நாடகமாடினேன். பிரசவத்துக்காக போவதாக சொல்லி சென்னை வந்து என் அம்மா வீட்டில் தங்கினேன்.. முதலில் குழந்தையை யாராவது விற்றால் அதை வாங்கி கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன்.. ஆனால் யாருமே விற்க முன்வரவில்லை.. அதனால்தான் மெரினாவில் ஜானை பார்த்தேன்.
எனக்கு கொஞ்சம் இந்தி பேச தெரியும்.. நான் இந்தியில் பேசியதும் குழந்தை டக்கென என்னை திரும்பி பார்த்தான். அப்படியே அவன் அம்மாவிடம் பேச்சு தந்தபோதுதான் அவர்கள் வறுமை தொரிந்தது. சினிமா ஆசை காட்டி கடத்திட்டேன்.. குழந்தை தாய்ப்பால்தான் குடிச்சிட்டு வந்திருப்பான் போல.. நான் புட்டிப்பாலை கொடுத்ததும் அவனுக்கு ஒத்துக்கல.. உடம்பும் சரியில்லை.. அதனால்தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தேன்.
அங்கே ஒரு நர்ஸ் என்னையே பார்த்துட்டு இருந்தாங்க.. அடிக்கடி வந்து குழந்தை பத்தி கேட்டுட்டே இருந்தாங்க.. "ஏன் தாய்ப்பால் கொடுக்காமல், புட்டிப்பால் தர்றே"ன்னு கேட்டாங்க.. அவங்கதான் என்னை போலீசில் புடிச்சி தந்துட்டாங்க" என்றார்.இதையடுத்து ரேவதி மற்றும் தவறுக்கு உடந்தையாக இருந்த அவரது அம்மா ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications