வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்.. புதுவை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு
சென்னை: வாய வச்சிகிட்டு சும்மா இருந்திருக்கலாம்தானே என்று தங்கள் எதிரணி கட்சித் தலைவர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.
புதுச்சேரியில் நேற்று இரவு மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி, மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். இதன்பிறகு பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
புதுச்சேரியின் தனித் தன்மையை நாம் ஒருபோதும் இழக்கக் கூடாது. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து தேவையாக உள்ளது. படித்தவர்கள் அனைத்து இடத்திலும் உள்ளனர். ஆட்சி மீது கோபம் காட்டும் இளைஞர்கள், தேர்தலில் வாக்களித்து தங்கள் கோபத்தை வெளிக்காட்ட வேண்டும்.

எதிரிகள்
எங்களுக்கு நல்ல நல்ல யோசனைகளை வழங்குவதே எங்களது அரசியல் எதிரிகள்தான். ட்விட்டரில் மட்டுமே இயங்கி வந்ததாக என்னை விமர்சனம் செய்தனர். எனவே, அடுத்த 3 மாதங்களில் அரசியல் களத்துக்கு நேரடியாக வந்துவிட்டேன். இவர்கள் நகர்ப்புற மக்களுக்கான கட்சி என்று விமர்சித்தனர். நான் பிரச்சாரத்தை துவங்கியதே கிராம சபை கூட்டங்களில் இருந்துதான். எங்களுக்கே தெரியாததையெல்லாம் எதிரிகள் சொல்லித் தருகிறார்கள். வாயை வைத்துக் கொண்டு அவர்கள் சும்மா இருந்திருக்கலாம்.

வேலைவாய்ப்பு
மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் அறிக்கையில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைகளை பல பிரிவுகளாகப் பிரித்து, ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு என இலக்குகளை நிர்ணயித்து, 5 ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.
வளங்களை முறையாக கையாளும் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே தமிழகத்துக்கு கொண்டு வரப்படும்.

குளங்கள் வெட்டுவோம்
மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு பிணையில்லாத கடன் வழங்க நடவடிக்கை எடுப்போம். குடும்ப தலைவிகளை, வீட்டில் இருந்தே, சுயதொழில் செய்ய ஊக்கப்படுத்துவோம். தமிழகத்தில் மொத்தம் 60 ஆயிரம் கிராமங்களில் 30 ஆயிரம் இடங்களில் குளங்களை வெட்டினால் போதும். அதன் மூலம் விவசாயம் செழித்து, கூடுதல் வேலைவாய்ப்பை அளிக்க முடியும்.

மக்கள் வளம் பெற்றுள்ளனரா
தமிழத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நல்ல விஷயங்களைச் செய்வதாக சொல்வார்கள். ஆனால் இரு தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டனர். மண்ணை வளப்படுத்தவில்லை. மக்கள் அளிக்கும் அதிகாரத்துக்காகவே மக்கள் நீதி மய்யம் காத்திருக்கிறது. ஒவ்வொரு பகுதி மக்களின் குரலை லோக்சபாவில் எதிரொலிக்க வைக்கும் தேர்தல் இது. பிரதமர் யார் என்பதை மட்டும் மக்கள் பார்க்கத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications