பார்க்க விடாமல் தடுத்த மாமியார் பச்சையம்மாள்.. தலைக்கேறிய கோபம்.. பிளேடால் வெட்டிய ரஞ்சித்
மாமியாரை பிளேடால் வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டார்
சென்னை: மாமியார் பச்சையம்மாள் கையை மருமகன் ரஞ்சித் பிளேடால் வெட்டிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
சென்னை கலங்கரை விளக்கம் ஏகாம்பரம் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித். 23 வயதாகிறது. கல்யாணம் ஆகிவிட்டது. மனைவி பெயர் முத்துலட்சுமி. ரஞ்சித் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இதனால் முத்துலட்சுமியின் அம்மா பச்சையம்மாள் கூடவே இருந்து தாய்-சேயை கவனித்து வந்தார்.
அன்றைய தினம் இரவு ரஞ்சித் தனது குழந்தையை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவர் செம போதையில் இருந்ததாக தெரிகிறது. முதன்முதலாக குழந்தையை பார்க்க வரும் சமயம், அதுவும் ஆஸ்பத்திரிக்குள் வரும்போது தண்ணி அடித்துவிட்டு வந்ததால் பச்சையம்மாளுக்கு கோபம் வந்தது.
அதனால் போதையுடன் குழந்தையை பார்க்க வர வேண்டாம் என்று சொல்லி உள்ளார். இதனை ரஞ்சித் ஏற்கவே இல்லை. தொடர்ந்து குழந்தையை பார்க்க முயற்சித்தார். அப்போது மாமியாருக்கும் - மருமகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏற்கனவே போதையில் இருந்த ரஞ்சித், ஆத்திரம் அதிகமாகி, தன் கையில் வைத்திருந்த பிளேடால் மாமியாரின் கையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பச்சையம்மாள் வலியால் அலறி துடித்தார். ரத்தம் கொட்டிய நிலையில், அதே ஆஸ்பத்திரியில் அழைத்து சென்று அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரியிலேயே மாமியாரை மருமகன் வெட்டியதால், அங்கிருந்த ஊழியர்கள் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளிக்கவும், அவர்கள் விரைந்து வந்து ரஞ்சித்தை கைது செய்து கொத்தோடு தூக்கி கொண்டு போனார்கள்.












Click it and Unblock the Notifications