சரண்யா பேசவே இல்லை.. அதுக்கு பழிவாங்கதான் அவரோட அப்பாவை கொல்ல முயன்றேன்.. பகீர் இளைஞர்
காதலி பேசாத காரணத்தினால் அவரது அப்பாவை இளைஞர் தாக்கி உள்ளார்
சென்னை: "சரண்யா என்கிட்ட பேசவே இல்லை.. இதுக்கு பழிவாங்கதான் அவளுடைய அப்பாவை கொல்ல முயற்சி செய்தேன்" என்று இளைஞர் ஒருவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை சோமமங்கலம் கருணகரசேரி கிராமத்தை சேர்ந்தவர் லோகனாதன். இவருக்கு 55 வயதாகிறது. தாம்பரத்தில் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ். 19 வயதான இவரும் லோடு ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் லோகனாதனின் மகள் சரண்யாவை 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். சரண்யாவுக்கு இப்போது வயசு 19.
சரண்யா
ஆனால் கடந்த 6 மாசமாக சரண்யா, சதீஷுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது, பலமுறை சரண்யாவிடம் சதீஷ் பேச முயற்சித்தும், சரண்யா பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில், சதீஷூக்கு நேற்று போன் செய்த சரண்யா, இனிமேல் தன்னுடன் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.
சரமாரி வெட்டு
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், சரண்யாவின் தந்தை லோகனாதன், மேட்டூர் சுடுகாடு அருகே லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது ஆட்டோவை மடக்கி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஏமாற்றத்தை தாங்காமல், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டார்.
ஆஸ்பத்திரி
இதில் லோகனாதன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள், லோகனாதனை தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இது சம்பந்தமாக சோமமங்கலம் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார், மேலத்தூர் பஸ் ஸ்டேண்டில் நின்று கொண்டிருந்த சதீஷை கைது செய்தனர்.
அவமானம்
அப்போது விசாரித்ததில், "6 வருஷமா சரண்யாவை காதலிக்கிறேன். அதனால் 2015-ம் வருஷமே என் அப்பாவை சரண்யாவை பெண் கேட்க அனுப்பி வைத்தேன்(அப்போ சதீஷ்-க்கு வயசு 15). ஆனால் அப்போது 18 வயது பூர்த்தி ஆகாததால், சரண்யாவின் உறவினர்கள் என் அப்பாவை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிட்டாங்க. இந்த அவமானத்திலேயே மன உளைச்சலில் இருந்த என் அப்பா பூச்சி மருந்தை குடிச்சி தற்கொலை செய்துக்கிட்டார். இதுக்கு பழி வாங்கதான் சரண்யாவின் அப்பாவை கொல்ல முயற்சித்தேன்" என்று போலீசாரிடம் சதீஷ் கூறியுள்ளார்.