நிலப்பிரச்சினை.. இளைஞரின் தலையை துண்டாக வெட்டி வீசிய கும்பல்.. சிங்கப்பெருமாள்கோயிலில் ஷாக்!
செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் அருகே இளைஞரின் தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சிங்கபெருமாள் கோயில் ஜேஜே நகர் பகுதியை சேர்ந்த பாபு என்கிற குண்டுபாபு என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரணி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நில பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த தீபாவளி அன்று இருவரும் தனித்தனியே மது அருந்திக் கொண்டிருந்த போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பாபு, பரணியை கெட்ட வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது.
கடும் ஆத்திரம்
இதனால் பாபு மீது பரணி கடும் ஆத்திரத்தில் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அவரை கொலை செய்ய பரணி திட்டமிட்டு அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் ஹோட்டல் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது சிங்கபெருமாள் கோயில் எம்ஜிஆர் நகர் பகுதியில் பாபுவை பரணி தனது கூட்டாளிகளுடன் வழிமறித்தார்.
கூட்டாளிகளுடன் சரமாரியாக வெட்டிய பரணி
அப்போது பாபுவை பரணியும் கூட்டாளிகளும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பாபுவின் தலையை வெட்டி சாலையில் வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார்
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் கொலை செய்யப்பட்ட பாபு மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பரணி அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு ரவுடியாக வலம் வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
6 மாத கைக்குழந்தை
விசாரணையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பாபுவுக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.