அம்மாவ தெரிதாப்பா! பஹ்ரைனில் விபத்தில் சிக்கி சென்னை வந்த மகனின் நிலையை கண்டு பதறி கதறிய தாய்!
சென்னை: வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் அங்கு விபத்தில் சிக்கிய நிலையில் 4 மாத போராட்டத்திற்கு பிறகு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா- அழகி தம்பதி. இவர்களுக்கு வீரபாண்டி (25), அழகு பெருமாள் (22) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சுப்பையா கட்டட வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த அவர் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் எழுந்தது.
இதனால் குடும்பம் நடத்தவே அழகி கஷ்டப்பட்டு வந்தார். தந்தையால் முடியாத நிலையில் வீட்டில் வறுமை சூழ்ந்து கொண்டதால் இதை பார்த்த மகன்களுக்கு துக்கம் தாளவில்லை. படிப்பும் அந்த அளவுக்கு இல்லாத நிலையில் அதிக ஊதியம் பெற்று குடும்பத்தை நடத்த வேண்டுமானால் வெளிநாட்டுக்கு செல்வது என வீரபாண்டி முடிவு செய்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பஹ்ரைனில் வேலைக்கு சென்றார். அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஸ்டோர் கீப்பர் பணி கிடைத்தது. மாதம் ரூ 20 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் அவ்வப்போது பணத்தை சேர்த்து குடும்பத்திற்கு அனுப்பி வந்த நிலையில் யார் கண்ணு பட்டுச்சோ, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீரபாண்டி ஒரு விபத்தில் சிக்கினார்.
கடந்த டிசம்பர் 7ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வழக்கம் போல் தான் தங்கியுள்ள ரூமுக்கு வீரபாண்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது கனரக வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளானார். இதையடுத்து அவர் பஹ்ரைன் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிக்கு சேர்க்கப்பட்டார். இந்த விஷயம் வீரபாண்டியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து தனது மகனை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என எண்ணினர். ஆனால் அதற்கு நிறைய லட்சங்கள் செலவாகும் என்பதால் அவ்வளவு பணத்திற்கு எங்கே செல்வது, யாரை கேட்பது என வேதனையில் இருந்தனர். இந்த தகவல் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு சமூகஆர்வலர் ஒருவர் மூலம் தெரியவந்தது. இதையடுத்து 4 மாத போராட்டத்திற்கு பிறகு விமானம் மூலம் வீரபாண்டியை சென்னை கொண்டு வர அமைச்சர் உதவினார்.

சென்னை விமான நிலையத்தில் தனது மகனை கண்டதும் தாய் அழகி அழுது கொண்டே ஓடி வந்து கட்டி அணைத்து மகனுக்கு முத்தம் கொடுத்தார். பிறகு அம்மாவ தெரியுதாமா.. அழகி அம்மாமா.. அம்மாட்ட வந்துட்ட இனிமே பயப்படாத மா.. அம்மா நல்லா பாத்துப்பேன்ல.. என கண்ணீர் விட்டு அழுதார். வீரபாண்டியும் குழந்தை போல் தனது தாயின் கண்ணீரை துடைத்து விட்டார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்தே அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் தாயின் பாச போராட்டத்தை கண்ட மக்களும் கண்கலங்கினர்.












Click it and Unblock the Notifications