'ஓசி' டிக்கெட் தானே.. உங்களுக்கு சீட் கிடையாது.. பிராட்வே பஸ்சில் பெண்களிடம் இளைஞர்கள் ரகளை
சென்னை: சென்னையில் பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்சில், ஓசி டிக்கெட் என்று கூறி பெண்களை இருக்கையில் இருந்து எழுந்திருக்க வைத்து அவர்களிடம் இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓசி டிக்கெட்டில் தானே பயணம் செய்கிறீர்கள்? ஏன் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சென்னை ஐய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே செல்லக்கூடிய வழித்தடத்தில், தடம் எண் 26 எண் கொண்ட பஸ் இன்று வழக்கம்போல் பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று காலை வடபழனி அருகே சென்ற போது, அந்த பஸ்சில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறியுள்ளனர். அவர்கள் பஸ்சில் ஏறியதில் இருந்தே தொடர்ச்சியாக ரகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது, பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த 5க்கும் மேற்பட்ட பெண்களை எழுப்பிவிட்டு இந்த இளைஞர்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருக்கின்றார்கள். அப்போது அந்த இருக்கைகளில் அமர்ந்துகொண்டு தொடர்ந்து ரகளை செய்து இருக்கிறார்கள். அப்போது ஒரு பெண் ஏன் பெண்களை இருக்கையில் இருந்து எழுப்பிவிட்டுவிட்டு நீங்கள் அமர்ந்து இருப்பது பற்றி கேள்வி கேட்டுள்ளார்.
அப்போது அந்த இளைஞர்கள் நீங்கள் ஓசி டிக்கெட் தானே.. ஓசியில் டிக்கெட் எடுத்துவிட்டு நீங்கள் அமர்ந்து வருவீர்கள். காசு கொடுத்து பயணம் செய்யும் நாங்கள் நின்று கொண்டு வரவேண்டுமா? என்று கேட்டதாகவும், மேலும் ஒருமையில் பேசியதாகவும், தரக்குறைவாக ஆபாசமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அந்த பெண் மீண்டும் இதுபற்றி அந்த இளைஞர்களிடம் கேட்டிருக்கிறார்.
குறிப்பாக ஓசி டிக்கெட் என்று ஏன் சொல்லுகின்றாய்.. இது என்ன பேச்சு.. என்று கேட்டிருக்கிறார். பெண்கள் சீட் தானே நீங்கள் ஏன் அமர்ந்து இருக்கிறீர்கள். இருக்கையில் இருந்து எழுந்திருங்கள்.. ஓசி டிக்கெட் தானே ஏன் உட்கார்ந்து வருகிறீர்கள் என்று ஏன் பேசுகிறீர்கள் என அந்த பெண் கேட்டார். அப்போது இரண்டு பேர் அமரும் இருக்கையில் 3 இளைஞர்கள் அமர்ந்துகொண்டு இருந்ததில் ஒருவர் இந்த பெண்ணிடம் பதில் அளிக்கின்றார்.
"அக்கா ரொம்ப பயந்துட்டோம்.. நீங்க மட்டும் தான் வீடியோ எடுப்பீங்களா.. ஏ, நீயும் வீடியோ எடுடா.." என்று பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கண்டக்டர் மற்றும் மற்ற பயணிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது போன்று இந்த வீடியோ பதிவாகியிருந்தது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவிய நிலையில், இது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த வீடியோவில் தோன்றிய இளைஞர்கள் யார்? என்பது குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். சென்னையில் ஓடும் பஸ்சில் பெண் பயணிகளை ஓசி டிக்கெட் என்று இளைஞர்கள் விமர்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications