சென்னை இளைஞர்களே இப்படி மட்டும் ஏறிடாதீங்க.. கொத்தாக மாட்டிக்கிட்டாங்க.. வீட்டுக்கே பறந்த பைன்
சென்னை: சென்னையில் காலையில் டிராபிக் அதிகமாக இருக்கிறது என்று பாதசாரிகள் செல்லும் பாதையில் ஏறிவிடாதீர்கள். அப்படி ஏறி சென்றவர்கள் சென்னை போலீசிடம் கொத்தாக மாட்டியிருக்கிறார்கள். வீட்டுக்கு அபராதம் செலுத்த சொல்லி நோட்டீஸ் பறந்துள்ளது.
சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை யாராலும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. பறக்கும் டாக்ஸிகள் கண்டுபிடித்து வானத்தில் பறந்தாலும், வானத்திலும் டிராபிக் நெரிசல் ஏற்படும். அங்குமே சிக்னல், யூடர்ன் எல்லாம் போட வேண்டியதிருக்கும். ஆம்..கற்பனைக்காக சொல்லவில்லை.. காலம் அப்படியும் ஒரு நாள் வரலாம்.. ஏனெனில் சென்னையில் வாகனங்கள் செல்ல சாலைகள் போதவில்லை.

காலை நேரத்தில் அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகிலோ, வடபழனியிலோ, வேளச்சேரி பினீக்ஸ் மால் அருகிலோ, குரோம்பேட்டை பல்லாவரத்திலோ, ஓம்ஆர் சாலையிலோ, அண்ணா சாலையிலோ, கிண்டி மேம்பாலத்திலோ ஏதாவது சிக்கல் ஏற்பட்டு ஜாம் ஆனால் போக்குவரத்து நெரிசலை சரி செய்வது மிகவும் கடினம்.
ஏனெனில் சென்னையில் மொத்த மக்களும் கடந்து செல்லும் பகுதிகள் இவை தான். சென்னையில் வேலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றாக வேண்டும் என்று நினைக்கும் வாகன ஓட்டிகள், சிக்னலை கண்டு கொள்வது இல்லை. சில சமயம் பாதசாரிகள் செல்லும் மிடியனில் கூட ஏறி செல்வார்கள். இதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம். இப்படிப்பட்ட விதிமீறல்கள் மீது போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்நிலையில் சென்னை நகரில் பல இடங்களில் தானியங்கி கேமரா பொறுத்தப்பட்டள்ளது. இதன் காரணமாக விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கிறார்கள். போலீஸ் இல்லையே என்று நினைத்து, விதிகளை மீறி, கண்டபடி வாகனத்தை ஓட்டி செல்வோருக்குத்தான் அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் அச்சுறுத்தியபடி செல்வோர், மூன்று பேர் ஒரே வாகனத்தில் செல்வோருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுதவிர சென்னையில் போக்குவரத்து போலீசாரை டேக் செய்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள். அப்படித்தான் ஒருவர் போலீசாரை டேக் செய்து, கிண்டி சர்தார் படேல் சாலையில் பாதசாரிகள் செல்லும் பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. இப்படி சென்றால் பாதசாரிகள் செல்லும் பாதையே அழிந்துவிடும். நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த சென்னை போலீசார், உங்கள் ட்விட்களை ஆராய்ந்து அபராதம் விதிக்கப்படுகிறது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. சலானையும் போலீசார் வெளியிட்டுள்னர்.

எனவே சென்னை இளைஞர்களே போக்குவரத்து விதிகளை மீறி பாதசாரிகள் செல்லும் பாதையில் சென்றுவிடாதீர்கள். அப்படி சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications