யூடியூப் பார்த்து மகப்பேறு செய்யும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது: அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்
யூ ட்யூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதை அகற்றுவதுடன் மகப்பேறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சென்னை: தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023-ஆம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். யூ-ட்யூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் பேறுகால தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும் ஐ.நா நிர்ணயித்த அளவைவிட, இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேறுகால தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் ஐ.நா பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை பேறுகால தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும் அது ஐ.நா நிர்ணயித்த விகிதத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் அதிக இறப்பு
அதிகமான பேறுகால இறப்புகள் கொண்ட மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட, அஸ்ஸாம் ஆகியவற்றில் எம்.எம்.ஆர் விகிதம் 175-இல் இருந்து 161 ஆக குறைந்துள்ளது. கேரளாவில் தாய் இறப்பு விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் 66-லிருந்து 40 ஆக குறைந்துள்ளது.

கேரளா
கேரளாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட 43 என்பதைவிட அங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே எம்.எம்.ஆர் உள்ளது. இருந்தும் இறப்பு விகிதத்தில் கடைசி இடத்தில் இருக்கிறது கேரளா. பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், கடுமையான ரத்தப் போக்கு, பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையால்தான் அதிக இறப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கு மிகக் குறைந்த எம்.எம்.ஆர் விகிதமான 43 உடன் கேரளா முதலிடத்தில் உள்ளது. ஒரு லட்சத்துக்கு 46 என்ற விகிதத்தில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது.

அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் பேறுகால மரணங்கள் குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2017-18 காலத்தில் மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கேரளம், மராட்டியத்துக்கு அடுத்த படியாக இருந்த தமிழகம் இப்போது தெலுங்கானாவுக்கு பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது.

தமிழகத்தின் நிலை
2016-17ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தாய்மார்கள் இறப்பு விகிதம் (ஒரு லட்சம் மகப்பேறுகளில்) கேரளத்தில் 13, மராட்டியத்தில் 8, ஆந்திரா தெலுங்கானா தலா 7 குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 மட்டுமே குறைந்துள்ளது. ஆந்திரத்துடன் சமநிலையில் உள்ள தமிழகம் விரைவில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படலாம்.

தாய்மார்கள் இறப்பு விகிதம்
தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023-ஆம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும். இது மிகவும் சவாலானது. ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 108 அவசர ஊர்திகளையும் அதிகரிப்பது உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்!

யூட்யூப் பிரசவம்
யூ-ட்யூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதை அகற்றுவதுடன் மகப்பேறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிருக்கான மகப்பேறு கால நிதியுதவியை ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications