"இன்பார்மர்" தந்த தகவல்.. தருமபுரியில் தட்டி தூக்கிய போலீஸ்.. பப்ஜி மதனை கைது செய்தது தனிப்படை!
சென்னை: தமிழ்நாடு போலீசுக்கு தண்ணி காட்டி வந்த பப்ஜி மதன் இன்று தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிரைம் போலீசார் இவரை தருமபுரியில் கைது செய்துள்ளனர்.
Recommended Video
யூ டியூபில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளின் ட்ரிக்குகளை சொல்லி தருவதாக சேனல் நடத்தி வந்த யூ டியூப் கேமர் மதன் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பெண்களிடம் தவறாக பேசுதல், வீடியோ எடுத்து மிரட்டுதல், பண மோசடி, இளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது என்று பல்வேறு புகார்கள் கேமர் மதன் மீது வைக்கப்பட்டுள்ளது.
இவர் மீது 150க்கும் மேற்பட்ட பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

தேடுதல்
இவரின் மனைவி கிருத்திகாவிற்கும் இதில் தொடர்பு இருப்பது சிபிசிஐடி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதன் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டார். கிருத்திகாதான் இவரின் யூ டியூப் சேனலில் முக்கிய நிர்வாகி என்பதும் சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்தே மோசடிகளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முன் ஜாமீன்
இதையடுத்து இன்னொரு பக்கம் பப்ஜி மதன் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில், யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி முன்ஜாமீன் வழக்கில் மதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியது.

ஜாமீன் இல்லை
நேற்று மதனுக்கு முன் ஜாமீன் கிடைக்காத நிலையில், சைபர் கிரைம் போலீசார் இன்று அவரை நெருங்கினார்கள். நேற்று மதனின் அப்பா மற்றும் அவரின் சகோதரர் சம்பத் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். மதனின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். இதில் மதன் தர்மபுரிக்கு சென்று இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.

உறுதி
தருமபுரியில் இருக்கும் இன்பார்மர்கள் மூலம் மதன் எங்கே இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு இருக்கும் உறவினர் வீடு ஒன்றில் மதன் தலைமறைவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த சென்னை சைபர் கிரைம் போலீஸ் மதனை தருமபுரியில் வைத்து கைது செய்தது. இன்றே இவர் சென்னை கொண்டு வரப்பட உள்ளார்.

புகார்கள்
டெலிகிராமில் காசு வாங்கிக்கொண்டு சிறுமிகளின் வீடியோக்களை இவர் விற்றதாக புகார்கள் அடுக்கப்படுகின்றன. இணையத்தில் கடந்த 4 நாட்களாக இது தொடர்பான புகார்கள் அதிகம் வைக்கப்பட்டு வருகின்றன. இவை மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் மாநில குழந்தைகள் நல ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்
பாலியல் ரீதியாக இவர் மீது நிறைய புகார்கள் ஆதாரங்களுடன் இணையத்தில் அடுக்கப்பட்டு வருகின்றன. தனது கேம் சேனலுக்கு நிதி திரட்ட வேண்டும் என்று சிறுவர்களிடமும், சிறுமிகளிடம் பணம் வாங்கி மோசடி செய்து இருக்கிறார். யூ டியூபில் இவருக்கு மாதம் 7 லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் கிடைத்துள்ளது. பெரிய பங்களா, சொகுசு கார் என்று பலரை ஏமாற்றி இவர் சம்பாதித்தது அம்பலம் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications