யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார்
சென்னை: பாஜக பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த யூடியூபர் முக்தார், கர்நாடக மாநிலம் மைசூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஏற்கனவே திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த முக்தாரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா. கார் ரேசரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவில் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த அலிசா அப்துல்லாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக தீவிர அரசியலில் இருந்து கடந்த சில மாதங்களாக ஒதுங்கியிருக்கும் அலிசா அப்துல்லா, அண்மையில், சென்னை காவல் ஆணையநகரத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

யூட்யூபர் முக்தார் கைது
அதாவது, யூட்யூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா ஆகிய இருவரும் தன்னைப் பற்றியும் தனக்கு பிறந்த குழந்தைகள் பற்றியும் அவதூறாக பேசுவதாகவும், பெண்கள் பற்றி கண்ணியக்குறைவாக பேசும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் திருச்சி சூர்யா சிவாவை கைது செய்தனர்.
எனினும், இந்த வழக்கில் தொடர்புடைய யூடியூபர் முக்தார் தலைமறைவு ஆகினார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு வாரமாக தலைமறைவு ஆகியிருந்த முக்தார் சென்னை அழைத்து வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
முக்தார் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆபாச மற்றும் காமராஜர் குறித்து அவதூறாக பேசியது என பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்த போதிலும் கடந்த ஆட்சியில் கைதில் இருந்து தப்பி வந்த முக்தார், அலிசா அப்துல்லா புகாரில் சிக்கியுள்ளார்.
முன் ஜாமீன் மனு முடித்து வைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்தார் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, முக்தார் கைது செய்யப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு வழக்குகளில் யூடியூபர் முக்தார் அகமது (50) கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை சைபர் குற்றப்பிரிவு, சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும், இதுவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படவில்லை என்றும் அரசு தரப்பு தெரிவித்தது. இந்த தகவலை பதிவு செய்த நீதிபதி, முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்களையும் முடித்து வைத்தார்.
முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் தாக்கல் செய்த முக்தார், தனக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விளம்பர நோக்கத்தில் தனக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார்கள். நான் மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவன். பல்வேறு அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிகையாளராக செயல்பட்டு வருகிறேன். நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் கடைப்பிடிப்பதாகவும் உறுதியளித்து இருந்தார். தற்போது, முக்தாரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், முன் ஜாமீன் மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications