உங்களை நம்ப மாட்டோம் சந்திரபாபு நாயுடு.. ஆந்திராவைக் கலக்கும் ஜெகன் மோகன்!
- கோயா
சென்னை: ஆந்திராவைக் கலக்க ஆரம்பித்திருக்கிறார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி. 'நின்னு நம்மம் பாபு' என்ற பெயரில் அவர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திற்கு ஆதரவு கூடி வருகிறதாம்.
ஆந்திராவில் ஆட்சியை பிடிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் ஜெகன் மோகன் ரெட்டி கண கச்சிதமாக செய்து வருகிறார். 'சகோதரன் அழைக்கிறேன்' என்ற பெயரில் கடந்த 14 மாதங்களாக அவர் நடத்திய பாதயாத்திரை அவருக்கு பயன் தரும் வகையில் அமைந்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர்.மறைவுக்கு பின்பு காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக அரசியல் செய்ய தொடங்கினார். 'நின்னு நம்மம் பாபு' என்ற முழக்கத்தை முன் வைத்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
உங்களை நம்ப மாட்டோம்
அதென்ன நின்னு நம்மம் பாபு என கேட்கத் தோன்றுகிறதா, இதற்கு தெலுங்கில் 'நாங்கள் உங்களை நம்ப மாட்டோம் சந்திரபாபு நாயுடு' என்பதே பொருள். இந்த பிரச்சாரத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
தேர்தல் ஸ்பெஷலிஸ்ட்
தேர்தல் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் பேரில் செயல்பட்டு வரும் ஜெகன் மோகன், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரச்சார வாகனங்களை பிரத்யேகமாக தயார்செய்து தொகுதிகளில் உள்ள மூலை முடுக்குகளுக்கு எல்லாம் உலாவ விட்டுள்ளார்.
கிராம சபை கூட்டங்கள்
மேலும் தற்போது திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊராட்சி சபை கூட்டத்திற்கு முன்னோடியே ஜெகன் மோகன் ரெட்டிதான். அவர் இதை ஏற்கனவே ஆந்திராவில் செய்து விட்டாராம். அதற்கு கிடைத்த வரவேற்பை வைத்துதான் திமுகவே இந்த நிகழ்ச்சியை நடத்த தொடங்கியதாக கூறப்படுகிறது.
நாயுடு தூக்கம் போச்சு
பாதயாத்திரையின் போது கவர் செய்யப்படாத நகரங்கள் மற்றும் 50 தொகுதிகளுக்கு பஸ் யாத்திரையை தொடங்கி சந்திரபாவு நாயுடுவின் தூக்கத்தை கலைத்து வருகிறார். மேலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அளிக்கும் குடைச்சலால் எரிச்சலில் உள்ள மோடி, ஜெகன்மோகனை வளர்த்து விடுவதாக கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதன் காரணமாகவே மோடியை ஆட்சியை வீழ்த்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு சபதம் ஏற்றுள்ளார்.