வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்!
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உலகப் புகழ்பெற்ற SAAS நிறுவனமான ஜோஹோ (Zoho), தற்போது வன்பொருள் (Hardware) துறையிலும் தனது பயணத்தை அதிரடியாக தொடங்கியுள்ளது.
'நாது லா' (Nathu La) என்ற பெயரில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட புதிய சர்வர் தளத்தை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அமைக்கப்படும் Data Centres மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த உள்கட்டமைப்புச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க ஜோஹோ உதவுகிறது. இதுவரை மென்பொருள் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், இப்போது தொழில்நுட்பத்தின் அடிப்படைத் தேவையான சர்வர் கட்டமைப்பிலும் தடம் பதித்துள்ளது.

நாக்பூரில் உருவான இந்தியத் தயாரிப்பு
இந்த 'நாது லா' சர்வர், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஜோஹோ நிறுவனத்தின் இன்ஜினியரிங் குழுவால் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டது. மங்கேஷ் சதாபலே (Mangesh Sadafale) தலைமையிலான இந்த ஆய்வுக் குழு, பல ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற இன்டெல் (Intel) நிறுவனத்துடன் இணைந்து, அதன் அதிநவீன 'சியோன் 6' (Xeon 6) செயலிகளைப் பயன்படுத்தி இந்த சர்வர் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியப் பொறியாளர்களின் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்தத் திடீர் மாற்றம்?
இதுவரை சர்வர் போன்ற வன்பொருள்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களையே ஜோஹோ சார்ந்து இருந்தது. ஆனால், தொழில்நுட்ப உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், மென்பொருள் மட்டுமல்லாது அதன் அடிப்படையான உள்கட்டமைப்பையும் (Infrastructure) சொந்தமாக வைத்திருப்பது அவசியம் என்று நிறுவனம் கருதுகிறது.
இது குறித்துப் பேசிய ஜோஹோ நிறுவனத்தின் ஏஐ (AI) ஆராய்ச்சி இயக்குநர் ராம்பிரகாஷ் ராமமூர்த்தி, கணினி உள்கட்டமைப்பு என்பது ஒரு நிறுவனத்தின் அடிப்படைத் தூண் போன்றது என்றும், அந்தத் தொழில்நுட்பம் நம்மிடமே இருப்பதுதான் எதிர்கால வளர்ச்சிக்குச் சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த செலவு மற்றும் மின்சார சேமிப்பு
இந்த புதிய சர்வர் பயன்பாட்டிற்கு வருவதால், மின்சார நுகர்வு சுமார் 12 முதல் 18 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு சர்வரைப் பராமரிப்பதற்கான ஒட்டுமொத்தச் செலவு (Total Cost of Ownership) 20 முதல் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
இது ஜோஹோ நிறுவனத்தின் லாபத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தேவையான அதிகப்படியான கணினித் திறனை (Compute Power) குறைந்த செலவில் பெறவும் உதவும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் மேம்பட்ட சேவைகளை வழங்க முடியும் என Zoho தெரிவித்துள்ளது.
ஸ்ரீதர் வேம்பு
ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இது குறித்துக் கூறுகையில், இந்த 'நாது லா' சர்வர் உலகெங்கிலும் உள்ள ஜோஹோ தரவு மையங்களில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார். மென்பொருள் மற்றும் வன்பொருள் என இரண்டையும் மிகச் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கத் தங்களது குழு தொடர்ந்து உழைத்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமான பயனர்கள் ஜோஹோ மற்றும் மேனேஜ் என்ஜின் (ManageEngine) தயாரிப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த புதிய முயற்சி, அந்தப் பயனர்களுக்கு இன்னும் வேகமான மற்றும் தடையற்ற சேவையை வழங்க வழிவகுக்கும்.
ஜோஹோ நிறுவனத்தின் இந்த முயற்சி, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெறும் மென்பொருளோடு நின்றுவிடாமல், உலகத்தரம் வாய்ந்த வன்பொருள்களையும் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. தனது சொந்தத் டேட்டா சென்டர்களில் இந்தச் சர்வர்களைப் பயன்படுத்துவதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்களின் மீதான சார்பு குறையும். இது ஜோஹோ நிறுவனத்திற்கு ஒரு பெரிய மைல்கல்லாக அமைவதோடு, இந்தியத் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications